நாகர்கோவில், நவ. 26 –
இஸ்ரோ தலைவர் நாராயணன் இன்று குமரியில் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்தார். அப்போது நாகர்கோவிலில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது: நிசார் என்ற செயற்கைகோளை நாசா மற்றும் இஸ்ரோ இணைந்து அனுப்பியுள்ளது. இதற்காக நாசா (ஜே.பி.எல்) ₹10,300 கோடி செலவிட்டுள்ளது. இது பூமியின் வளங்களையும், நிலநடுக்கம் போன்றவற்றை கண்டறியவும் உதவுகிறது. இந்த பேலோட்கள், மழை, மேகமூட்டம் போன்ற எந்த தட்பவெப்ப நிலையிலும் (ஆண்டுக்கு 365 நாட்களும்) படங்களை எடுக்கக்கூடிய திறன் கொண்டவை.
விண்வெளி வீரர் சுபாஷ் சுக்லாவை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பியதும் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் கூட்டு முயற்சியாகும். 6,000 கிலோ எடையுள்ள ஒரு தகவல் தொடர்பு செயற்கைக்கோளை வணிக ரீதியாக நமது ராக்கெட் மூலம் அனுப்புவதற்குத் திட்டம் உள்ளது. இது டிசம்பரில் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 57 செயற்கைக்கோள்கள் செயல்பட்டு வருகின்றன. அடுத்த 3 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை மூன்று மடங்காக (150 செயற்கைக்கோள்கள்) உயர்த்தும் திட்டத்தில் இஸ்ரோ பணியாற்றி வருகிறது.
2027-க்குள் இந்தியாவின் ககன்யான் திட்டத்தின் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கான திட்டம் உள்ளது. இந்தியர்களுக்காக 2035-ல் ஒரு விண்வெளி நிலையத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்கு முதல் கட்ட ஒப்புதல் கிடைத்துள்ளது. மொத்தம் 52 டன் எடையுள்ள இந்த விண்வெளி நிலையம் 5 கட்டங்களாக அமைக்கப்படும். முதல் கட்டம் 2028-ல் அனுப்பப்படும்.
விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிப்பது, துறையைப் பாதிக்காது. இது ஒரு நல்ல மற்றும் பயனளிக்கும் திட்டமாகும். இது தனியார்மயமாக்கல் அல்ல, மாறாக விண்வெளித் துறை சீர்திருத்தம். தற்போது ஒரு மாதத்திற்கு ஒரு ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுகிறது. இது ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்கு 50 ராக்கெட்டுகளாக அதிகரிக்கப்பட வேண்டும் என்ற இலக்கு உள்ளது என கூறினார்.



