விழிஞ்ஞம் துறைமுகத்திலிருந்து 640 கண்டையினர்களுடன் கொச்சி துறைமுகம் சென்ற சரக்குக்கப்பல் ஒருபுறமாக சாய்ந்து விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 24 பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி ஆறுதலான செய்தி என்றாலும் அதிலிருந்த 640 கண்டையினர்களும் கடலில் மூழ்கிவிட்டதாக வரும் செய்தி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மீனவர்களை கடலிலிருந்தும் கடற்கரையிலிருந்தும் வெளியேற்றிவிடும் என்று நெய்தல் மக்கள் இயக்க மாவட்டச் செயலாளர் குறும்பனை பெர்லின் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:
விழிஞ்ஞம் துறைமுகத்திலிருந்து சரக்குகளை ஏற்றிச்சென்று கொச்சி துறைமுகத்தில் இறக்கிவிட்டு அங்கிருந்து தூத்துக்குடி துறைமுகம் வந்து சரக்குகளை இறக்கத் திட்டமிட்டு சென்ற சரக்குக் கப்பல்தான் கொச்சி அருகே கடலில் மூழ்கி இருக்கிறது. இந்த கப்பலில் 13 கண்டையினர்களில் ஆபத்தான ரசாயனங்களும் 12 கண்டையினர்களில் கால்சியம் கார்பைடு ரசாயனங்களும் இருப்பதாக கப்பல் கம்பெனி அறிவித்துள்ளது. இது உண்மைதானா? அல்லது 640 கண்டையினர்களிலும் ஆபத்தான ரசாயனங்கள் இருக்கின்றனவா என்று அரசு தெளிவுபடுத்தவேண்டும்.
விழிஞ்ஞம் துறைமுகத்தில் ஆபத்தான ரசாயனங்களை ஏற்றி இறக்க அனுமதி இல்லை என்று சொல்லுகின்ற நிலையில் இந்த ரசாயனம் ஏற்றிய கண்டையினர் எங்கிருந்து வந்தது. விழிஞ்ஞம் அதானி சரக்குப்பெட்டக துறைமுகம் அமைந்தால் கடலுக்கும் கடற்கரைக்கும் ஆபத்து என்று கேரளா மாநிலம் மற்றும் தமிழ்நாட்டுக்கும் சுற்றுச்சூழல் ஆபத்து ஏற்படும் என்று மக்கள் தலைபாடாக அடித்துக்கொண்டு போராட்டம் நடத்தினார்கள். இதுபோன்ற ரசாயனங்களை கையாளும்போது விபத்து ஏற்பட்டால் கடலும் கடற்கரையும் மனித சமூகமும் விவசாய நிலப்பகுதியும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று மக்கள் போராட்டம் நடத்தியபோது அதானி துறைமுகம் கேரளாவிற்கும் இந்தியாவிற்கும் வளர்ச்சி என்ற சொர்க்கவாசலைத் திறந்துவிடும் என்று பாஜகவும் காங்கிரசும் கம்யூனிஸ்டுகளும் பேசி போராடும் மக்களை சமூக விரோதிகளாக தேசத்துரோகிகளாக சித்தரித்து போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்கினார்கள். விழிஞ்ஞம் 8000 கோடி என்றால் இனையம் சரக்குப்பெட்டக மாற்றுமுனையம் 29000 கோடி ரூபாயில் வர இருந்தது. அதை மூன்று ஆண்டுகள் தொடர்ந்து போராடி கன்னியாகுமரி மாவட்டம் பாலைவனமாக மாறுவதை மக்கள் தடுத்தார்கள்.
விழிஞ்ஞம் துறைமுகம் மொத்த முதலீடான 8000 கோடி ரூபாயில் வெறும் 575 கோடி முதலீடு செய்த அதானிக்கு 40 ஆண்டுகள் லாபம் பார்க்க கொடுத்துவிட்டு நாடு வளர்ச்சியடைகிறது என்று இந்திய அரசும் கேரள அரசும் நான்முந்தி நீமுந்தி என்று சாதனைப் பட்டியல் வாசிக்கிறார்கள். ஆனால் லாபம் நாட்டுக்கல்ல அதானிக்கு என்பது விபரம் அறிந்தவர்களுக்குத் தெரியும். நாடுமுழுவதும் உள்ள அரசு துறைமுகங்களையும் மீன்பிடித் துறைமுகங்களையும் அதானிக்குக் கொடுத்துவிட்டு அந்தத் துறைமுகங்கள் மூலமாக போதைப்பொருள் கடத்தல் தொழில் மூலம் கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம் அடிப்பதுபோல் இப்போது விழிஞ்ஞம் துறைமுகம் மூலமாக ஆபத்தான ரசாயனங்களை ஏற்றி இறக்கி கொள்ளை கொள்ளையாய் லாபம் பார்க்க திட்டமிடுகிறார்கள். விபத்து நடந்து கப்பல் கவிழவில்லையென்றால் இந்த ஆபத்தான ரசாயனங்களைக் கையாளும் சம்பவமே தெரியாமல் மறைக்கப்பட்டிருக்கும்.
கப்பலில் இருந்த 24 ஊழியர்களும் மீட்கப்பட்டார்கள்; மூழ்கிய கப்பலுக்கு இன்சூரன்ஸ் கம்பெனி இழப்பீடு வழங்கிவிடும் அதனால் இது “குட் ஆக்சிடன்ட் ” என்று கூறுகிறார்கள். ஆனால் இன்னொரு பக்கம் கண்டையினர்களில் ஆபத்தான ரசாயனங்கள் இருப்பதால் 30 நாட்டிகல் தூரம்வரை மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம். கடலில் யாரும் இறங்கக் கூடாது கண்டையினர் கரை ஒதுங்கும்போது அதன் அருகிலோ கடற்கரையிலோ யாரும் செல்லக்கூடாது. பாதுகாப்பான இடங்களுக்கு மீனவர்களை அப்புறப்படுத்தவேண்டும் என்று சொல்வதன்மூலம் கடலிலிருந்தும் கடற்கரையிலிருந்து மீனவர்களை வெளியேற்ற எடுக்கும் முயற்சியோ என்று அச்சப்படுகிறோம்.
இதனால் தொழிலை இழந்து தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உயிர் பயத்தில் வாழும் மக்களுக்கு சரியான இழப்பீடு வழங்குவதோடு கடலும் கடற்கரையும் கடலோடிகளின் வாழ்வாதார இடங்களாக அறிவித்து அதைப் பாதுகாக்க இதுபோன்ற துறைமுகங்கள் வழியாக ஆபத்தான ரசாயனங்களை ஏற்றிச்செல்வதைத் தடுக்கவேண்டும். தவறுகிறவர்கள் மீதுகடும் நடவடிக்கை எடுத்து அத்துறைமுகங்களை முழுமையாக மூடவேண்டும் என்று அரசுக்கு நெய்தல் மக்கள் இயக்கம் கோரிக்கை வைக்கிறது.
இவ்வாறு குறும்பனை பெர்லின் கூறினார்.
விழிஞ்ஞம் கப்பல் விபத்து மீனவர்களை கடலிலிருந்தும் கடற்கரையிலிருந்தும் வெளியேற்றச் செய்யும் சதியா?!

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics