அரியக்குடி புத்தூர் ஊராட்சியில் கண்மாயில் மீன்கள் செத்து மிதப்பதால் தொற்று என்று கூறுவது வதந்தி
ஊராட்சித் தலைவர் காயத்ரி கார்த்திக் பாண்டியன் விளக்கம்!
போகலூர், ஆக. 20-
அரியக்குடி புத்தூர் ஊராட்சியில் உள்ள கண்மாயில் மீன்கள் செத்து துர்நாற்றம் என்று வீண் வதந்தி பரப்பி உள்ளனர். கண்மாய் சுத்தமாகவும் மக்கள் சுகாதாரமாகவும் உள்ளனர் என்று ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி கார்த்திக் பாண்டியன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றியம் அரியக்குடி புத்தூர் ஊராட்சியில் உள்ள கணமாயில் மீன்பிடிப்பதற்கான ஏலம் விதிகளுக்கு உட்பட்டு அரசு உத்தரவு பெறப்பட்டு ஏற்கனவே ஏலம் விடப்பட்டுள்ளது. வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்தறை அதிகாரிகளின் உரிய அனுமதி பெற்று கண்மாய் மீன்பிடிக்க ஏலம் விடப்பட்டு ஏலம் எடுத்தவர்கள் மீன்பிடித்து விட்டனர். இந்நிகழ்வு நடந்து ஒரு மாதத்திற்கும் மேலாகி தற்போது மீண்டும் மழை பெய்து கண்மாய் தண்ணீர் தேங்கத் துவங்கியுள்ளது. கண்மாயில் பிடிக்கப்பட்ட மீன்கள் முறைப்படி கொண்டு செல்லப்பட்டு விட்டது. தற்போது அப்பகுதியில் சொரி கெளுத்தி என்ற ஒரு வகை மீன் சாப்பிடுவதற்கு உகந்ததல்ல. இந்த மீனை கண்மாய் பகுதியில் சிலர் தூக்கி எறிந்துள்ளனர். அதை உள்நோக்கத்துடன் அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் சித்தரித்து துர்நாற்றம் மற்றும் தொற்றுநோய் பரவுகிறது என்று வதந்தியை பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் தவறானது. கண்மாயின் சுகாதார நிலவரம் குறித்து அரசுத்துறை அதிகாரிகளுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாத வகையிலும் சுகாதாரம் முற்றிலும் பாதுகாக்கும் வகையில் அரியக்குடி ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. சிலர் தூக்கி எறிந்த சொரி கெழுத்தி மீனையும் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஊராட்சி பகுதியில் சுகாதாரம் மீது ஊராட்சி நிர்வாகம் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.
இவ்வாறு ஊராட்சி தலைவர் காயத்திரி கார்த்திக் பாண்டியன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.