நாகர்கோவில் – செப்- 29,
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் பெரும்பாலான உணவகங்களில் விலைப் பட்டியல் வைக்கப்படுவதில்லை. இதனால் இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளிடம் உணவுகளின் விலையினை தங்கள் விருப்பத்திற்கு கூறும் நிலை உள்ளதால் பயணிகள் மிகுந்த பாதிப்பு அடைந்து வருகின்றனர். எனவே அனைத்து உணவகங்களில் விலைப் பட்டியல் வைப்பதை கட்டாயப்படுத்திட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தியது.
இதன் பேரில் கன்னியாகுமரியில் பேரூராட்சி சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது 52 கடைகள் மற்றும் உணவகங்களில் விலைப் பட்டியல் இல்லாதது தெரியவந்தது.இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட உணவகங்கள் மீது நடவடிக்கை எடுத்திடும் வகையில் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுப்பொருட்களின் விலை விபரம் குறித்த பட்டியல் அனைவருக்கும் தெரியும் விதத்தில் முன்பகுதியில் வைக்கும்படியும் தெரிவித்து உள்ளனர்.
மேலும் இதன் பின் நடைபெறும் திடீர் ஆய்வில் மேற்படி விலைப் பட்டியல் அகற்றப்பட்டு இருந்தால் குறிப்பிட்ட உணவக தொழில் உரிமம் ரத்து செய்யப்படும். இது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறையின் மேல் நடவடிக்கைகளுக்கு பேரூராட்சியால் பரிந்துரைக்கப்பட்டு கடைகள் சீல் வைக்கப்படும்.
அவ்வாறு மூடப்படும் கடை உரிமையாளர் மாவட்ட ஆட்சித் தலைவரின் அனுமதி பெற்று மட்டுமே மீண்டும் கடை திறக்க அனுமதிக்கப்படுவர்.தவறும் வியாபாரிகளுக்கு பேரூராட்சி எல்லைக்குள் வியாபாரம் செய்ய அனுமதி மறுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இத்தகைய நடவடிக்கை வரவேற்கதத்தக்கது. ஆனால் அரசால் வழங்கப்படும் உத்தரவினை அமுல்படுத்திடும் வகையில் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பதோடு, உரியமுறையில் விதிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது நடவடிக்கையினை பாரபட்சமின்றி எடுப்பதால் மட்டுமே இப்பிரச்னை தொடராமல் தடுக்க இயலும்.