மார்த்தாண்டம், மே – 25.
குமரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக களியல், அருமனை உள்ளிட்ட மலையோர கிராமங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று காலையில் களியல் சந்திப்பு பகுதியில் சாலையோரம் நின்ற மின் கம்பம் ஒன்று திடீரென முறிந்து சாலையில் விழுந்தது. இதில் மின்கம்பிகள் அறுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் சாலையில் மின்கம்பம் கிடந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இதனால் அந்த வழியாக வந்த அரசு பஸ்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்கள் போக்குவரத்து தடைபட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட மின்வாரிய துறை ஊழியர்கள் விரைந்து வந்து அந்தப் பகுதியில் முறிந்த மின் கம்பத்தை சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்பு அகற்றினர். அதன்பிறகு போக்குவரத்து சரி செய்யப்பட்டது.