ராமநாதபுரம், ஏப்.13-
தேங்காய் விலை வீழ்ச்சியை நிரந்தரமாக கட்டுப்படுத்த ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னை விவசாயிகள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட தென்னை விவசாயிகள் சங்கம் பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் அப்துல் முனாப் தலைமையில் ராமநாதபுரம் பாரதி நகரில் தனியார் மஹாலில் நடைபெற்றது. பொதுக்குழு கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் மணி மாதவன், பொருளாளர் மோகன், துணைத் தலைவர் கதிரேசன், துணைச் செயலாளர் தங்கச்சாமி, ஒருங்கிணைப்பாளர் கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திருப்புல்லாணி மண்டபம் ராமநாதபுரம் ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த தென்னை விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர். குறிப்பாக பெண் விவசாயிகள் அதிக அளவில் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தென்னை வணிக வளாகத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஒதுக்கீடு செய்த ரூபாய் 2 கோடி நிதியை ஆதாரமாகக் கொண்டு உடனடியாக கட்டுமானப் பணிகளை தொடங்க வேண்டும். கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டும். தென்னை விவசாயிகளுக்குரிய இலவச உரம் தென்னங்கன்றுகள் மற்றும் இதர இடு பொருள்களை மத்திய மாநில வேளாண்மை துறை உரிய காலத்தில் வழங்க ஆவண செய்ய வேண்டும். தேங்காய் விலை வீழ்ச்சியை நிரந்தரமாக கட்டுப்படுத்த ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசு நாபெட் நிறுவனத்தின் மூலம் கொள்முதல் செய்து வைத்திருக்கின்ற கொப்பரை கொள்முதலை தனியார் வியாபாரிகளுக்கு குறைந்த விலையில் தருவதை உடனடியாக நிறுத்த வேண்டும் இந்த கொப்பரையை எண்ணெய் எடுத்து ரேஷன் கடைகளில் விநியோகம் செய்ய இந்த பொதுக்குழு வாயிலாக வலியுறுத்தப்படுகிறது.
கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் கோபால் நன்றி கூறினார்.



