மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த நடைபயண விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கொடி அசைத்து தொடக்கி வைத்தார். இந்த பேரணியில் கிராமிய நாடக கலைஞர்கள் பச்சைக்காளி, பவளக்காளி, கருப்பண்ணசாமி வேடமணிந்தும், கிராமிய இசைக் கலைஞர்கள் பறை இசைத்தவாறும் பங்கேற்றனர். கிராமியக் கலைகளை அழியாமல் பாதுகாக்கும் கிராமிய நாடக கலைஞர்கள் மற்றும் கிராமிய இசை கலைஞர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணியில் கல்லூரி மாணவ மாணவிகள், நர்சிங் கல்லூரி மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



