திங்கள் சந்தை, மார்- 23
இரணியல் அருகே உள்ள ஆளூர், துவரவிளை பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (62). இவர் கொத்தனார் வேலை செய்கிறார். நேற்று மதியம் இவர் தோட்டியோடு – திங்கள்நகர் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். பரசேரி பகுதியில் செல்லும் போது எதிரே வேகமாக வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக குமரேசன் சென்ற பைக் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட குமரேசனுக்கு உடலில் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் குறித்து குமரேசனின் மனைவி வசந்தா என்பவர் இரணியல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் அஜாக்கிரதையாகவும் வேகமாகவும் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய டிரைவர் லட்சுமிபுரம் பகுதி சேர்ந்த சுந்தர்ராஜ் மீது இரணியல் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.