ராமநாதபுரம், நவ.23-
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் பால்வளத் துறை மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர் எஸ் ராஜகண்ணப்பன் ஆகியோர் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
இந்த ஆய்வின்போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் பால்வளத்துறை மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர் எஸ் ராஜ கண்ணப்பன் ஆகியோர் ராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட தங்கப்பா நகர் பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளது நகராட்சி நிர்வாகம் மூலம் வெளியேற்றப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
அதனைத் தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்;
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் படி நானும் பால்வளத்துறை மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர் எஸ் ராஜ கண்ணப்பன் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்து தொடர் மழையால் தண்ணீர் தேங்கி பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு வருகிறோம். கடந்த இரண்டு நாட்களில் அதிக மழை பெய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. ராமேஸ்வரம் மண்டபம் ராமநாதபுரம் பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு மழை பெய்துள்ளது. ராமநாதபுரம் நகராட்சியில் மட்டும் 30 இடங்களில் பொதுமக்கள் வசிப்பிடங்களில் தண்ணீர் தேங்கியதை உடனடி நடவடிக்கையால் 22 இடங்களில் உள்ள மழை நீர் அகற்றப்பட்டுள்ளது. மேலும் எட்டு இடங்களில் மழை நீர் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள் கண்டறிந்து உடனடியாக மாவட்ட நிர்வாகம் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,
இவ்வாறு கூறினார்.
பின்னர் மண்டபம் பேரூராட்சி மேற்கு வாடி கடற்கரை பகுதியில் கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட படகுகளை பார்வையிட்டார். பாம்பன் ஊராட்சி முந்தல் முனை பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து இருப்பதை பார்வையிட்டதுடன் ராமேஸ்வரம் நகராட்சி ஓழைக்குடா பகுதியில் கடல் சீற்றத்தால் கடன் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்த சாலையை பார்வையிட்டு ஆய்வு செய்து கூறும் போது:
மண்டபத்தில் மேக வெடிப்பு காரணமாக ஒரே நாளில் 31 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் கடல் சீற்றத்தின் காரணமாக அதிவேக காற்றில் பாதிப்பால் மண்டபம் பேரூராட்சி மேற்கு வாடி கடற்கரை பகுதியில் ஏழு மீன்பிடி விசைப்படகுகள் மிகவும் பாதிப்படைந்துள்ளது. அவர்களுக்கு ரூபாய் 2 லட்சம் மீன்வளத் துறையின் மூலம் வழங்க உள்ள நிலையில் பராமரிப்பு தொகை உயர்த்தி தர வேண்டி மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். முதலமைச்சரிடம் மீனவர்களின் கோரிக்கை தெரிவித்து உரிய இழப்பீடு பெற்று தரப்படும். இப்பகுதியில் ரூபாய் 25 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வலை அமைக்க நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. பணி முழுமையாக முடிப்பதற்கு மேலும் ரூபாய் 40 கோடி தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார்கள். அதுமட்டுமின்றி பகுதியில் தூண்டில் வலை அமைத்தால் மட்டும்தான் போட்டுகள் பாதிப்படையாமல் பாதுகாக்க முடியும் என தெரிவித்துள்ளதை ஒட்டி கோரிக்கைகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து பேசி இப்பகுதியில் தூண்டில் வலை அமைக்கப்படும். தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை வேளாண்மை துறையின் மூலம் ஆய்வு செய்து இழப்பீடுகளுக்கான உரிய நிவாரணம் விவசாயிகளுக்கு வழங்கப்படும். வீடு இழந்தவர்களுக்கும் மற்ற பொருட்சேதங்களுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, சட்டமன்ற உறுப்பினர்கள் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் ( ராமநாதபுரம்), முருகேசன் ( பரமக்குடி), மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, கூடுதல் ஆட்சியர் ( வளர்ச்சி) வீர பிரதாப் சிங், உதவி ஆட்சியர் முகம்மது இர்பான், ராமநாதபுரம் நகராட்சி சேர்மன் கார்மேகம், துணைச் சேர்மன் பிரவீன் தங்கம், நகராட்சி கமிஷனர் அஜிதா பர்வீன் உட்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.