திருப்பூர் ஜூன்: 27
தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை கலந்த பான்மசாலா,
குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மேற்படி விற்பனை செய்யும் கடைகள் மூடி சீலிடப்படுவதோடு கடும் அபராதம் விதிக்கப்பட்டும் வருகிறது.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா மற்றும் நிக்கோட்டின் கலந்த புகையிலை பொருட்களின் பயன்பாட்டினை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் அவர்களின் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மரு.பா.விஜய லலிதாம்பிகை அவர்களின் தலைமையில் மாவட்டத்திலுள்ள உணவு பாதுகாப்பு அலுவலர்கள், காவல்துறை காவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து 01.06.2024 முதல் கூட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டதில் 78 கடைகளிலிருந்து சுமார் 620கிலோகிராம் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது ஆய்வின் போது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
மேற்படி 78 கடைகளும் பூட்டி சீலிடப்பட்டதோடு மேற்படி கடைகளுக்கு ரூ.21,25,000 அபராதமாக விதிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் பயன்பாட்டினை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு ஹான்ஸ், குட்கா ,கூல்லிப், பான் மசாலா போன்ற பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு முதல் முறையாக குட்கா விற்பனை செய்யும் குற்றத்திற்க்கு ரூ.25,000/- அபராதம் மற்றும் 15 நாட்கள் கடையை மூடி சீலிடுதல், இரண்டாம் முறை குற்றத்திற்க்காக ரூ.50,000/- அபராதம் விதிப்பதோடு 30 நாட்களுக்கு கடையை மூடி சீலிடும் நடவடிக்கையும் மற்றும் மூன்றாம் முறை குற்றத்திற்க்காக ரூ.1,00,000/- அபராதம் விதிக்கப்பட்டும், 90 நாட்களுக்கு கடையை மூடி சீலிட்டும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
முக்கியமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா ஹான்ஸ் போன்ற நிக்கோட்டின் கலந்த புகையிலை பொருட்கள் விற்பதை கண்டறிந்து முற்றிலும் ஒழிப்பதற்கு தொடர் நடவடிக்கை மாவட்ட முழுவதும் எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்நடவடிக்கையை தீவிர படுத்தும் பொருட்டு, மேற்படி தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை மற்றும் சேமித்து வைத்திருப்பது கண்டறியப்பட்டால் கடைகள் உணவு பாதுகாப்பு உரிமம்/பதிவு சான்று ரத்து செய்யப்படும். மேலும் உள்ளாட்சித் துறையில் வழங்கப்படும் ட்ரேடு லைசென்ஸ் ரத்து செய்வதற்கு பரிந்துரை செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாகும்.
பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் இத்தகைய பான் மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதை உடனடியாக
9444042322 என்ற வாட்சப் எண்ணில் தொடர்பு கொண்டோ அல்லது
TN food safety consumer App என்ற செயலியில் பதிவேற்றம் செய்தோ புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரின் பெயர்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். இவ்வாறு உணவு பாதுகாப்பு துறை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.