சூலூர் அருகே சுமார் 5000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்; 3 நபர்களை கைது செய்து போலீசார் விசாரணை!
கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் அருகே பாப்பம்பட்டி பகுதியில் உள்ள ஒரு குடோனில் கேரளாவுக்கு கடத்தவிருந்த 5000 லிட்டர் எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக 3 பேரை கைது செய்தனர். கோவை சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டியில் ஸ்ரீநகரில் பகுதியில் குடோன் ஒன்று உள்ளது. கோவையைச் சேர்ந்த அரவிந்த் என்பவர் இந்த குடோனை கவனித்து வருகிறார்.
இந்த குடோனில் கேரளாவுக்கு கடத்துவதற்காக எரிசாராயம் பதுக்கி வைத்துள்ளதாக கோவை மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சூலூர் காவல் நிலைய போலீசார் பதுக்கி வைத்திருப்பதாக கூறப்பட்ட குடோனை அதிரடியாக சோதனை செய்தனர். அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் கேன்களில் சுமார் 5145 லிட்டர் எரிசாராயம் பதுக்கி வைத்துஇருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக எரிசாராய கேன்களை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட கேரள மாநிலம் கொல்லங்கோட்டைச் சேர்ந்த ரஜித் குமார் (38), ஒண்டிப்புதூரைச் சேர்ந்த பிரபாகர் (47), கேரள மாநிலம் இடுக்கியைச் சேர்ந்த ஜான் விக்டர் (45) ஆகியோரை கைது செய்தனர். இந்த மூவரிடமும் எரி சாராயம் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது? இந்த கடத்தல் சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக கள்ளச்சாராயம் மரணங்கள் தமிழகத்தை உலுக்கி வரும் நிலையில் கோவை புறநகரப் பகுதியில் சுமார் 5000 லிட்டர் எரி சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.