திருவெண்ணெய்நல்லூர், ஆக. 29 –
திருவெண்ணெய்நல்லூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 27-ந் தேதி விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை 3-வது நாள் வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைப்பது வழக்கம்.
இந்நிலையில் திருவெண்ணெய்நல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வாகனங்களில் விநாயகர் சிலைகள் கடைவீதி வழியாக தொடங்கிய ஊர்வலத்தில் இளைஞர்கள் ஏராளமானோர் ஒருவருக்கொருவர் தங்கள் முகத்தில் வண்ணங்களை பூசிக்கொண்டு ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் பக்தி கோஷங்களை எழுப்பி ஊர்வலமாக கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள கடலில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக வாகனங்கள் அணிவகுத்து ஊர்வலமாக சென்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவெண்ணெய்நல்லூர் இன்ஸ்பெக்டர் அழகிரி தலைமையிலான போலீசார் தீவிர பாதுகாப்புடன் பணியில் ஈடுபட்டிருந்தனர்.



