தஞ்சாவூர், ஆகஸ்ட் 28 –
தஞ்சாவூரில் முதல் அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை அமைச்சர் கோவி. செழியன் கொடியசைத்து துவக்கி வைத்தார். தஞ்சாவூரில் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழாவில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கினார். முரசொலி எம்பி, எம்எல்ஏக்கள் துரை சந்திர சேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
தடகள போட்டிகள், கூடைப்பந்து, ஆக்கிப்போட்டிகளை உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தொடங்கி வைத்தார். இதையடுத்து கல்லூரி மாணவ மாணவிகளுக்கான தடகள போட்டிகள் கல்லூரி மாணவர்களுக்கான கூடைப்பந்து, ஆக்கி, கைப்பந்து, கேரம், நீச்சல் மேஜை பந்து, கபடி ஆகிய போட்டிகள் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நடந்தது.
இறகு பந்து போட்டிகள் கமல சுப்பிரமணியம் மேல்நிலைப்பள்ளியிலும், கிரிக்கெட் மற்றும் செஸ் விளையாட்டு போட்டி மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் நடைபெற்றது. இந்த போட்டிகளில் 2400 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இந்த போட்டிகள் அடுத்த மாதம் செப்டம்பர் 10-ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் 3000 மும், இரண்டாம் பரிசாக ரூபாய் 2000-மும் மூன்றாம் பரிசாக ரூபாய் 1000மும் அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
தொடக்க விழாவில் உதவி கலெக்டர் (பயிற்சி) கார்த்திக் ராஜா முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) மாதவன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கற்பகம், மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல், மாவட்ட கூடை பந்து பயிற்றுனர் பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



