ராமநாதபுரம், ஆக. 12 –
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் முன்னிலையில் வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் பார்வையிட்டு ஆய்வு செய்து பேசியதாவது: மக்கள் அரசு அலுவலகங்களை தேடி வந்த நிலையை மாற்றி மக்களைத் தேடி அரசு அலுவலர்கள் வருகை தந்து கோரிக்கைகளை நிறைவேற்றிடும் வகையிலான உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் துவக்கி வைத்துள்ளார்கள். இதன் மூலம் நகர் பகுதி முதல் கிராம பகுதிகள் வரை அனைத்து இடங்களுக்கும் அரசு துறைகள் சென்று முகாமிட்டு மக்களின் கோரிக்கைகளை மனுக்களாக பெற்று உடனடி நடவடிக்கைக்காக பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் முதுகுளத்தூர் பேரூராட்சி பகுதிக்கு இம் முகாம் நடைபெற்று வருகிறது.
இம்முகாமில் நகர்ப்புறத்தில் 15 அரசுத்துறைகளில் 46 சேவைகள் வழங்கிடும் வகையிலும் ஊரகப் பகுதியில் 13 அரசு துறைகளில் 43 சேவைகள் வழங்கிடும் வகையில் அரங்குகள் அமைத்து பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்களை உடனுக்குடன் கணிணியில் பதிவேற்றம் செய்யப்படுவதுடன் மனுக்கள் மீது 45 தினங்களுக்குள் தீர்வு வழங்கிடும் வகையில் பணிகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் 4 நகராட்சிகள், ஏழு பேரூராட்சிகள், 11 ஊராட்சி ஒன்றியங்களில் 30.9.2025 வரை 217 முகாம்கள் நடைபெறுகின்றன. முகாம்கள் நடைபெறும் பகுதிகளில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை வழங்கி பயன்பெற்றிட வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார். பின்னர் தோட்டக்கலைத் துறையின் மூலம் விண்ணப்பித்த பயனாளிகளுக்கு விதை தொகுப்புகளை அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் சரவணபெருமாள், முதுகுளத்தூர் தாசில்தார் கோபிநாத், முதுகுளத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வராஜ், முதுகுளத்தூர் பேரூராட்சி சேர்மன் ஷாஜகான் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



