தஞ்சாவூர், ஜூன் 19 –
தமிழகம் முழுவதும் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற பெயரில் அரசின் திட்டங்கள் சேவைகள் வீடு தேடி வரும் வகையில் நடத்தப்படும். தஞ்சாவூரில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சையில் கள ஆய்வுப் பணி மேற்கொண்டார். தஞ்சாவூர் சரபோஜி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூபாய் 325 கோடியே 96 இலட்சத்தில் 92 ஆயிரம் செலவில் முடிவுற்ற 2461 பணிகளைத் திறந்து வைத்தார். ரூபாய் 309 கோடியே 48 இலட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 2 லட்சத்து 25 ஆயிரத்து 383 பயனாளிகளுக்கு ரூபாய் 558 கோடியே 43 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். விழாவில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திராவிட மாடல் அரசில் தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பயனளிக்கும் வகையில் ஏராளமான முத்திரைத் திட்டங்களை நாம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் நம்முடைய முத்திரைத் திட்டங்களால் ஏராளமான மக்கள் பயனடைந்திருக்கிறார்கள். ஒவ்வொருவரின் தேவைகளைக் கேட்டறிந்து திட்டங்களை நிறைவேற்றி விட்டு இங்கே வந்திருக்கின்றேன். ஆனால் இதை எல்லாம் பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி புலம்பிக் கொண்டிருக்கிறார்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்று நான் உங்களையெல்லாம் சந்தித்தபோது பெட்டியில் வாங்கிய மனுக்கள் என்ன ஆனது என்று கேட்டிருக்கிறார். அரசு சார்பில் செய்தி வெளியிடுகிறோம். அது டிவி, பத்திரிகை, சமூக வலைத்தளங்களில் வெளிவருகிறது. ஆனால் அதைப் பார்க்க மாட்டேன், படிக்க மாட்டேன் என்று அடம்பிடித்து இப்படி அரைவேக்காடுத்தனமாக அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கு இல்லாவிட்டாலும் மக்களான உங்களுக்குப் பதில் சொல்ல வேண்டியது என்னுடைய கடமை. உங்கள் தொகுதியில் ஸ்டாலின் முன்னெடுப்பில் பெறப்பட்ட 4 லட்சத்து 57 ஆயிரத்து 645 மனுக்களுக்கு தீர்வு காண வேண்டும். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற தனித்துறையை உருவாக்கி 100 நாட்களில் தீர்வு காண வேண்டும் என்று உத்தரவிட்டேன். 100வது நாளில் கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் 32,000 பேருக்கு பட்டா, 30,000 பேருக்கு ஓய்வூதியம், 10,000 பேருக்கு தொகுப்பு வீடுகள் வழங்கியதோடு அந்த மனுக்களை மையமாக வைத்து ரூபாய் 544 கோடி மதிப்பில் 20 ஆயிரம் வளர்ச்சிப் பணிகள் திட்டமிட்டோம். இதனால் மக்கள் நம்பிக்கையோடு மனுக்களை கொடுக்கத் தொடங்கினார்கள். அந்த மனுக்களை முழுமையாக முறையாக பரிசீலிக்க “முதல்வரின் முகவரி” என்ற தனித்துறையை உருவாக்கி எல்லா மனுக்களுக்கும் 30 நாட்களுக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்று உத்தரவிட்டேன்.
ஆனால் இதெல்லாம் எதிர்க் கட்சித் தலைவருக்குத் தெரியவில்லை. அந்தப் பெட்டிகளின் சாவி தொலைந்து விட்டதா? என்று கேட்கிறார். மக்களான உங்கள் குறைகளைத் தீர்க்க உங்கள் பகுதியிலேயே ஜூலை 15-ம் தேதி தொடங்கி தமிழ்நாடு முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடத்தப்படும். நகரப் பகுதிகளில் 3,768 முகாம்கள், கிராமப் பகுதிகளில் 6,232 முகாம்கள் என மொத்தம் 10 ஆயிரம் முகாம்கள் நடைபெறும்.
இந்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் எல்லாவற்றிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். நகரப் பகுதிகளில் 13 அரசு துறைகளின் 43 சேவைகள் திட்டங்கள் உங்களைத் தேடி வரும். இதுவே கிராமப் பகுதியில் 14 அரசு துறைகளின் 46 சேவைகளை நீங்கள் பெறலாம். கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விடுபட்ட தகுதியுள்ள பெண்கள் இந்த முகாம்களில் உங்களின் விண்ணப்பங்களை நிச்சயமாக தரலாம். இப்படி நீங்கள் தரும் விண்ணப்பங்கள் மேல் 45 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்படும். ஜூலை இரண்டாவது வாரம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை முகாம் நடக்கும்.
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? என்ன சான்று, ஆவணங்கள் எல்லாம் இணைக்க வேண்டும்? தகுதி வரம்பு என்ன? இப்படி தேவையான எல்லா தகவல்களும் வழிகாட்டுதல்களும் உங்கள் வீட்டுக்கே தன்னார்வலர்கள் வந்து கொடுப்பார்கள்.
இப்படியே நாளும் பொழுதும் அல்லும் பகலும் மக்களின் குறைகளைத் தீர்க்கும் நம்மை பார்த்தால் எதிர்க்கட்சித் தலைவருக்கு வயிறு எரிய தானே செய்யும். இப்படி இவர் ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படும் கவர்னர். தஞ்சை மாவட்டத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட வரைவை அனைவரின் ஒப்புதலோடு ஒரு மனதாக நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைத்தோம். அவர் ஒப்புதல் தந்திருந்தால் இன்றைக்கு இந்த நிகழ்ச்சியிலேயே கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்க அடிக்கல் நாட்டியிருப்பேன். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகாவது அவர் மாறியிருப்பார் என்று நினைத்தோம். ஆனால், இன்னும் மாறவில்லை. இப்படி கவர்னர் ஒரு பக்கம் என்றால், மத்திய அரசு மற்றொரு பக்கம் நிதி ஒதுக்காமல் உபத்திரவம் செய்கிறார்கள். அதையெல்லாம் சமாளித்து நாம் எவ்வளவோ திட்டங்களையும், பல சாதனைகளையும் செய்து கொண்டு தான் இருக்கிறோம்.
இன்றைக்கு கும்பகோணத்தில் நம்முடைய கருணாநிதி பெயரால் அமையவிருக்கும் பல்கலைக்கழகத்திற்கு இதுவரை கவர்னர் அனுமதி தரவில்லை; பொறுத்திருப்போம். பொறுத்தது போதும், பொங்கி எழுந்தால் அதற்குப் பிறகு கவர்னர் பணிய வேண்டிய ஒரு கட்டாயத்தை ஏற்படுத்துவோம் என்பதையும் இந்த நேரத்தில் உறுதியாக எடுத்துச் சொல்லிக் கொள்கின்றேன். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வீ.மெய்ய நாதன், எம்பிகள் திருச்சி சிவா, கல்யாண சுந்தரம், முரசொலி, சுதா, டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பழனி மாணிக்கம், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மேயர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.