தக்கலை, ஜூன் – 3
தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்தவர் முகேஷ் (40). கொத்தனார். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார். இவரது மனைவி கலையரசி (32). இவர்களுக்கு திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் குழந்தைகள் இல்லை.
இவர்கள் சமீபத்தில் புதிய வீடு கட்டியுள்ளனர். இதில் அதிக கடன் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் முகேஷ் படுக்கையில் இருந்து எழுந்து வெளியே வரவில்லை. கதவை உடைத்து பார்த்த ஒரு முகேஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு பிணமாக தொங்கினார். இது குறித்து தக்கலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முகேஷ் உடலை கைப்பற்றி குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முகேஷ் கடன் பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணமா? என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.