கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த சந்தூர் டாஸ்மாக் கடை எதிரே மழை நீர் தேங்குவதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். போச்சம்பள்ளி அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நல்ல மழை பெய்து வருகிறது. ஏரி, குளம், குட்டை என அனைத்தும் நிரம்பி வரும் நிலையில், விவசாய நிலங்களிலும் மழை நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் சந்தூர் டாஸ்மாக் எதிரே போச்சம்பள்ளி-கிருஷ்ணகிரி சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனை கடக்கும் வாகன ஓட்டிகள் சாலை தெரியாமல் அடிக்கடி விபத்துக்குள்ளாகுகின்றனர். தொடர்ந்து ஒரு வார காலமாக மழைநீர் தேங்குவதால், இரு சக்கர வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படுகின்றனர். சாலையில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கின்றனர்.



