கன்னியாகுமரி, செப்.08.
கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம் மற்றும் குளச்சல் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு. பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
குமரி–கேரள எல்லைப் பகுதியான நீரோடி, வள்ளவிளை, தூத்தூர், பூத்துறை, இரையுமன்துறை, தேங்காப்பட்டணம், குளச்சல், மண்டைக்காடு உள்ளிட்ட கடற்கரை பகுதிகள் வழியாக செல்லும் ஏ.வி.எம். கால்வாய் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்தது. இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையின் அடிப்படையில் தற்போது கால்வாயை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கால்வாயில் தேங்கியுள்ள செடி, கொடிகள், ஆகாயத்தாமரை, கழிவுகள் மற்றும் வண்டல் மண் ஆகியவற்றை அகற்றும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. கால்வாய் சீரமைக்கப்படுவதன் மூலம் மழைக்காலங்களில் வெள்ளநீர் எளிதாக வடிவதுடன், நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணிகளை தொய்வின்றி, குறித்த காலத்திற்குள் தரமாக முடித்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து லெட்சுமிபுரத்தில் நடைபெற்று வரும் மின்னணு பயிர் சாகுபடி கணக்கெடுப்பு மற்றும் தென்னை மரங்களுக்கு இடையே வாழை ஊடுபயிராக சாகுபடி செய்யப்பட்டுள்ளதையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், குளச்சல் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது நீர்வளத்துறை செயற்பொறியாளர் வசந்தி, குளச்சல் நகராட்சி ஆணையர் கோபால கிருஷ்ணன், செவிலியர்கள், துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



