மார்த்தாண்டம், ஜூன் 15 –
மார்த்தாண்டம் சிராயன்குழி அருகே குழித்துறை நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பம்மகுளத்தின் கரையை உடைத்து சேதப்படுத்தியது குறித்து நேற்று தினத் தமிழ் நாளிதழில் செய்திகள் வெளியானது. மேலும் சம்பந்தப்பட்ட நீர்வளத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கொடுத்து 24 மணி நேரம் கடந்த பின்னரும் குளத்தின் கரையை சேதப்படுத்தி பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்படுத்தியவர்கள் மீது நீர்வளத்துறை சார்பில் இதுவரை காவல்துறையில் புகார் எதுவும் கொடுக்கப்படவில்லை.
இதனால் குளத்தின் கரையை உடைத்த சட்டவிரோத கும்பல்களுக்கும் அதிகாரிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதோ? என்று சந்தேகம் தற்போது வெளிச்சம் போட்டு காட்டுவதாகவே இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிப்பதாகவே உள்ளது.
நீர்வளத் துறையில் சம்பந்தப்பட்ட பொறுப்பில் உள்ள அதிகாரிகள் பிரதிபலன் பெற்றதால் தான் காவல்துறையில் புகார் கொடுப்பதற்கு தாமதம் ஏற்படுத்தியுள்ளதாகவும் அதனால் தான் மேற்படி நீர்வளத்துறை அதிகாரியின் ஆதரவுடன் கரையை உடைக்கும் பணிகள் நடந்ததாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது.
ஆகவே தற்போது குமரி மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள நேர்மையான அதிகாரி என பெயர் பெற்ற மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து குளத்தை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க தக்க உத்தரவு பிறப்பதோடு காவல்துறையில் புகார் கொடுக்க நடவடிக்கை எடுத்து அரசுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.



