சேலம், ஜூன் 4 –
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி துறை மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது தாட்கோ மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு உணவு ஊட்டச்சத்து இயல், உடல் எடை சீரமைப்பு போன்ற பயிற்சிகள் வழங்க உள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற வயது 18 முதல் 35 வரை உள்ள குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் மூன்று லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இந்த தகுதிகளை உடைய இளைஞர்களுக்கான பயிற்சியின் கால அளவு 50 நாட்கள். இந்த பயிற்சிகள் ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. தகுதி பெறும் நபர்கள் பயிற்சி நடைபெறும் மாவட்டத்தில் தங்கி பயிற்சி பெறுவதற்கான செலவை தமிழக அரசின் தாட்கோ ஏற்றுக் கொள்ளும்.
இப்பயிற்சியில் தேர்ச்சி பெறும் தகுதியான நபர்கள் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலம் ஆரம்ப மாத ஊதியமாக சுமார் ரூபாய் 15,000 முதல் 20,000 ஆயிரம் வரை வருவாய் ஈட்டும் வகையில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இந்த பயிற்சியில் சேர்வதற்கு www.thatco.com என்ற தாட்கோவின் இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறுமாறு சேலம் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.


