நாகர்கோவில், ஏப். 18 –
குமரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான காவல் நிலையங்களில் லேண்ட்லைன் தொலைபேசிகள் செயல்படாமல் முடக்கத்தில் உள்ளது. முன்பு ஒரு குற்ற சம்பவம் நடைபெற்றால் அதன் தகவலை தெரிவிக்க அந்தப் பகுதியில் உள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ள லேண்ட்லைன் தொலைபேசியை எளிதில் தொடர்பு கொள்ள முடிந்தது. ஆனால் தற்போது ஒரு குறிப்பிட்ட காவல் நிலையங்களில் மட்டுமே லேண்ட் லைன் போன் செயல்பாட்டில் உள்ளது.
சில குறிப்பிட்ட காவல் நிலையங்களில் லேண்ட்லைன் போன் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் அசம்பாவிதங்கள் குறித்தும், புகார்கள் குறித்தும், காவலர்களை உதவிக்கு தொடர்பு கொள்ளவும் முடிவதில்லை என பரவலான குற்றச்சாட்டுகள் உள்ளது.
இரவு நேர பாதுகாப்பு ரோந்து காவலர்களில் தொலைபேசி எண்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து தினந்தோறும் வெளியிடப்பட்டு வருகிறது. இதனை பத்திரிகையாளர்கள் தினசரி நாளிதழ்களில், சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ஒவ்வொரு கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய செய்து வருகின்றனர். இது இரவு நேர பெண்கள் பாதுகாப்பிற்கும், பொது அச்சுறுத்தல்களுக்கும், குற்ற சம்பவங்கள் நடைபெறாமலும் இருக்க பெரிதும் உதவுகிறது. இரவு நேர ரோந்து தொலைபேசி எண் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.
ஆனால் பகல் நேரங்களில் ஒரு அசம்பாவிதம் நடைபெற்றாலோ, அல்லது நடைபெறுவதாக இருந்தாலோ, உடனே அப்பகுதியில் உள்ள காவல் நிலையங்களை பெரும்பாலும் தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது. அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் லேண்ட்லைன் போன் நம்பர் எழுதிப் போடப்பட்டுள்ளது. இன்று அனைத்து பொதுமக்கள் கையிலும் செல்போன் உள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள காவல் நிலையங்களின் தொலைபேசி எண்ணை பதிவு செய்து வைத்துள்ளனர். மேலும் தங்கள் பகுதியில் உள்ள ஆய்வாளர், உதவி ஆய்வாளர், காவலர்கள் போன்றவர்களின் எண்களையும் பெற்று பதிவு செய்து வைத்துள்ளனர்.
ஆனால் ஒரு காவல் நிலையத்தில் ஆய்வாளர், உதவியாளர் காவலர் போன்றவர்கள் நிரந்தரமாக இருப்பதில்லை. அவர்கள் வேறு காவல் நிலையத்திற்கு மாற்றலாகி செல்லும்போது அவர்கள் பணியாற்றிய இடத்தில் வேறு புதிய நபர்கள் பணி அமர்த்தப்படுவார்கள். இந்த சமயம் அந்தப் பகுதியில் ஒரு குற்ற சம்பவம் நடைபெற்றால் உடனே தங்களிடம் உள்ள காவலரின் எண்ணை தொடர்பு கொண்டால் அவர் நான் தற்போது மாற்றலாகி வந்து விட்டேன். எனவே நீங்கள் அந்த காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளியுங்கள் என கூறி விடுகிறார்கள். இதனால் சில குற்ற சம்பவங்கள் நடந்து விடுகின்றது.
சில பொதுமக்கள் அவசர தேவைக்காக 100 ஐ அழைக்கும் போது காலதாமதம் ஏற்படுவதாகவும் பொதுவாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. அதேபோல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறை என்னை தொடர்பு கொண்டு அவசர உதவி கேட்டால் அவர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளை தொடர்பு கொண்டு சம்பவ இடத்திற்கு காவலர்கள் வந்து சேரும்போது அங்கு சில குற்ற சம்பவங்கள் அரங்கேரி முடிந்து விடுகிறது. அதன்பின் காவலர்கள் வந்தும் எந்த பிரயோஜனமும் இல்லை எனவும் பொதுமக்கள் குற்றச்சாட்டாக உள்ளது.
காவல் நிலையங்களில் தொலைபேசி என்பது அத்தியாவசியமான, மிக முக்கியமான தொடர்புக் கருவியாகும். பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுமக்கள் தங்களுடைய சந்தேகங்கள், தகவல்கள் மற்றும் புகார்களைப் பகிர்ந்து கொள்ள எளிதான வழியாக தொலைபேசி உள்ளது. அதேபோல் அனைத்து காவல் நிலையங்களிலும் 24 மணி நேரமும் செயல்படும் CUG எண்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும், இதனால் பொதுமக்கள் எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ள முடியும்.
குற்றச் செயல்கள், விபத்துக்கள் அல்லது ஆபத்தான நேரங்களில், பொதுமக்கள் உடனடியாக 100 அல்லது உள்ளூர் காவல் நிலைய எண்ணை அழைத்து உதவி பெற தொலைபேசி உதவுகிறது.
நேரில் செல்ல முடியாத சூழ்நிலைகளில், தொலைபேசி மூலமாகவும், காவல் நிலைய லேண்ட்லைன் என்னை தொடர்பு கொள்ள இது பெரிதும் உதவுகிறது.
நாடு முழுவதும் 1,211 காவல்நிலையங்களில் அடிப்படை வசதியான தொலைபேசி வசதி கூட இல்லை என காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2012ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட அறிக்கையில், 296 காவல்நிலையங்களில் முற்றிலுமாக தொலைபேசி வசதி இல்லாமல் இருந்தது. தற்போது அது 1,211 காவல்நிலையங்கள் என உயர்ந்துள்ளன.
எனவே பொதுமக்கள் எளிதில் காவல் நிலையங்களை தொடர்பு கொள்ள முடக்கப்பட்ட லேண்ட்லைன் தொலைத்தொடர்பு எண்கள் மீண்டும் செயல்பட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் ஒட்டுமொத்த கருத்தாக உள்ளது.



