மார்த்தாண்டம், பிப். 19 –
கன்னியாகுமரி மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் கெ.எம் பாரதி தலைமையில் ஓட்டுனர் ஜாண் பிரைட் உள்ளிட்ட பறக்கும் படை குழுவினர் விளவங்கோடு வட்ட பகுதியில் இன்று அதிகாலை பொது வினியோக திட்ட கடத்தல் தடுப்பு ரோந்து பணியில் இருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமாக திருத்துவபுரம் பகுதியில் டாறஸ் லாறிகளுக்கிடையே மறைந்து வந்து கொண்டு இருந்த சொகுசு காரை சோதனை செய்ய நிறுத்தும் படி சைகை காட்டினர். ஆனால் வாகனம் நிற்காமல் விரைந்து சென்றது. அதை மடக்கி பிடித்த போது ஓட்டுனர் தப்பி ஓடினார். பின்னர் வாகனத்தை சோதனை செய்ததில் சுமார் 1500 கிலோ ரேஷன் அரிசி கேரளா மாநிலத்திற்கு கடத்தி செல்ல இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து கடத்தல் வாகனத்தை அரிசியுடன் பறிமுதல் செய்யப்பட்டன.
அதனை தொடர்ந்து காலை 6.30 மணியளவில் காரோடு என்ற இடத்தில் நடத்திய சோதனையில், மீண்டும் சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு சொகுசு காரை நிறுத்தும் படி சைகை காட்டிய போதிலும் கார் நிற்காமல் சென்றது. சுமார் 2 கிலோ மீட்டர் பறக்கும் படையினர் துரத்தி சென்ற போது, மாங்கோடு என்ற பகுதியில் காரை சாலையோரம் நிறுத்தி விட்டு இரண்டு நபர்கள் தப்பி ஓடினர். பின்னர் வாகனத்தை சோதனை செய்ததில் சுமார் 2000 கிலோ பொது வினியோக திட்ட அரிசி கேரளா மாநிலத்திர்க்கு கடத்தி செல்ல இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து 2 கடத்தல் சொகுசு வாகனங்களையும் ரேஷன் அரிசியுடன் பறிமுதல் செய்தனர். கைப்பபற்றப்பட்ட அரிசியை காப்புக்காடு அரசு நுகர் பொருள் வாணிபகழக கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது. கடத்தல் வாகனம் விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது.



