சுசீந்திரம், டிச. 23 –
சுசீந்திரம் அருகே உள்ள வழுக்கம்பாறையை அடுத்த மணவிளை காமராஜர் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் மணிகண்டன் (25). (கொத்தனார்) கூலித் தொழிலாளி. இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததும் வீட்டில் உள்ளவர்களிடம் நான் சாக போகிறேன் கூறி மிரட்டி வந்தார். அதை போல் நேற்று மாலை மணிகண்டன் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். வீட்டில் இருந்த அவரது தாயாரிடம் நான் சாகப்போகிறேன் என கூறிவிட்டு சென்றார்.
படுக்கை அறைக்கு சென்ற மணிகண்டன் நீண்ட நேரமாக வரவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் அங்கு சென்று பார்த்தபோது படுக்கை அறையில் உள்ள பேனில் மணிகண்டன் தூக்கில் தொங்கினார். இது குறித்து சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பெயரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
தூக்கில் பிணமாக தொங்கிய மணிகண்டன் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மணிகண்டனின் தந்தை முருகன் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். குடித்துவிட்டு வாலிபர் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


