விளாத்திகுளம், அக்டோபர் 31 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான விவசாயிகள் வட்டியில்லாக் கடன் பெற வருவதால் வங்கி முன்பு ஏராளமான விவசாயிகள் கொளுத்தும் வெயிலில் மணிக்கணக்கில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய மோசமான நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அவ்வாறு பயிர்க்கடனுக்கு விண்ணப்பிக்க வரும் விவசாயிகளை, விளாத்திகுளம் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கியில் பணிபுரியும் பணியாளர்கள் மிகவும் அநாகரிகமாக நடத்துவதோடு, ஆமை வேகத்தில் பணிகளை மேற்கொண்டு விவசாயிகளை அதிக நேரம் அலைக்கழிப்பதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. மேலும் இங்கு போதிய இட வசதி இல்லாத காரணத்தினால் ஒரு நாளைக்கு மிகக் குறைவான அளவிலேயே விவசாயிகளுக்கு டோக்கன் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
விவசாயிகள் எளிதில் கடனுதவிகள் பெற்று விவசாயப் பணிகளை மேற்கொண்டு பயன்பெற வேண்டுமென தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் இருந்தும் கூட தற்போது, விவசாயிகள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் மட்டுமே கடன் பெற முடியும் என்ற இந்த அறிவிப்பால் விவசாயிகள் தங்களது விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் தினசரி வங்கி முன்பு சாலையோரத்தில் பல மணிநேரம்காத்துக் கிடக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆகையால், இந்த நடைமுறையை ரத்து செய்து முன்பு வழங்கப்பட்டதை போல அந்தந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் மூலமாக விவசாயிகளுக்கு வட்டி இல்லா கடன்களை வழங்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.



