நாகர்கோவில், செப். 22 –
குமரி மாவட்டம் இராஜாக்கமங்கலம் அருகே எள்ளுவிளை ஊராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார் கோயில் அருகே சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு குளம் தோண்டப்பட்டது. ஆனால், அந்த குளத்தில் நீர் வருவதற்கான வழித்தட கால்வாய் சரிவர அமைக்கப்படாததால் பல ஆண்டுகளாக குளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியாததால் குளம் எந்த ஒரு பயன்பாடும் இன்றி காணப்பட்டது.
இந்நிலையில், எள்ளுவிளை ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் வேல்கிருஷ்ணன் குளத்திற்கு நீர் எடுத்து செல்லும் முயற்சியை பொதுமக்கள் ஒத்துழைப்புடன் முன்னெடுத்து, காரவிளை சானலில் இருந்து குளம் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நீர் வழித்தட கால்வாய் புதிதாக வெட்டப்பட்டது. புதிய வழித்தடம் மூலம் தற்போது குளத்தில் ஆற்று நீர் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.இதன் மூலம், குளம் நீரால் நிரம்பியதோடு, சுற்றுப்பகுதிகளில் நிலத்தடி நீர் உயர்வதற்கும், உப்பு தன்மை குறைவதற்கும் வாய்ப்பு உள்ளது. மேலும், குளத்தை சுற்றியுள்ள சுற்றுவட்டார பகுதிகளில் சுத்தமான குடிநீர் கிடைக்கும் என பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



