மதுரை, ஆகஸ்ட் 13 –
மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு மற்றும் பார்வையாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை முதல் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ம் தேதி 79-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. மத்திய உளவுத் துறை உத்தரவின்படி மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் விமான நிலையத்துக்கு வரும் வாகனங்களை சோதனையிட்ட பின்னரே அனுமதிக்கின்றனர். மேலும், பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும் பாதுகாப்புப் படை வீரர்கள் விமான நிலையத்தைச் சுற்றிலும் இரவு பகலாக வாகனங்களில் ரோந்து வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை முதல் விமான நிலையத்துக்குள் செல்ல பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. 5 அடுக்கு பாதுகாப்பையொட்டி அதிவிரைவு அதிரடிப் படை வீரர்கள் விமான நிலைய வெளிவளாகம், சோதனைச் சாவடி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


