1137 பயனாளிகளுக்கு ரூ.10.20 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்
ராமநாதபுரம், நவ.20-
ராமநாதபுரத்தில் கூட்டுறவு துறையின் மூலம் 71 வது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் (ராமநாதபுரம்), முருகேசன் ( பரமக்குடி) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பால்வள துறை மற்றும் கதர் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் 71 வது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழாவிற்கான கொடியை ஏற்றி வைத்து பேசியதாவது:
கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கும் பொது மக்களுக்கும் குறைந்த வட்டியில் நகை கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மகளிர் களுக்கு சுழல் நிதி கடனுதவி வழங்கப்படுகிறது. மேலும் கறவை மாடு, ஆடுகள் மானியத் திட்டத்தில் வழங்குவதற்கான கடன் உதவிகள் வழங்கப்படுகிறது. இதுபோல் கிராமப் பகுதிகளில் வாழும் பொது மக்களுக்கும் விவசாயிகளுக்கும் அரசு நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடைய கூட்டுறவு சங்கங்கள் உறுதுணையாக இருந்து வருகின்றன.
அந்த வகையில் கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கூட்டுறவு வார விழா நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பொது மக்களுக்கு அரசின் திட்டங்கள் முழுமையாக சென்றடைவதற்கான பணிகள் விரைவுப்படுத்தப்படுவது மட்டுமின்றி தனிநபர் பொருளாதார மேம்பாட்டிற்கான உதவிகளையும் கூட்டுறவு சங்கங்கள் செய்து வருகின்றன. கடந்த ஆட்சியாளர்கள் காலத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூபாய் 51 கோடி மட்டும் கடனுதவி வழங்கப்பட்டது. தற்போது திராவிட மாடல் திமுக ஆட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் ரூபாய் 400 கோடி கடன் உதவி வழங்கப்பட்டு விவசாயிகளுக்கும் மகளிர்களுக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கு திட்டங்களை வழங்கி பாதுகாக்கும் தலைவராக தமிழ்நாடு முதலமைச்சர் இருந்து வருகிறார்கள். பொதுமக்களுக்கு மிக அத்தியாவசிய தேவையான சாலை வசதி மின்சார வசதி மருத்துவ வசதி கல்வி மற்றும் போக்குவரத்து இவை அனைத்தையும் ஊதிய அளவிற்கு சிறப்பாக செயல்படுத்தி வருவது மட்டுமின்றி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மட்டும் தனித்திட்டமாக காவிரி கூட்டு குடிநீர் திட்டம் வழங்கி பணிகள் விரைவில் முடிவுற உள்ளது. இது மட்டும் இன்றி ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து கால்வாய்களும் சீரமைக்க போதிய நிதி வழங்க உத்தரவிட்டு அதற்கான பணிகளும் நடைபெற்ற வருகிறது. தமிழகத்தில் 48 சதவீதம் பெண்கள் வேலை வாய்ப்பு பெற்று இந்தியாவில் தமிழகம் முதன்மை மாநிலமாக இருந்து வருவதற்கு தமிழ்நாடு முதலமைச்சரின் சிறந்த ஆளுமை திறனே காரணமாகும். அதேபோல் தற்போது ஆவின் நிர்வாகம் மூலம் மற்ற தனியார் நிறுவனங்களை விட ஒரு லிட்டருக்கு ரூபாய் 12 விலை குறைத்து பால் விநியோகிக்கப்படுகிறது. காரணம் தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பான திட்டத்தின் பயனே ஆகும். அதுமட்டுமின்றி தற்போது ஆவின் உற்பத்தி பொருட்கள் திறனை அதிகரித்திடும் வகையில் கூடுதலாக தமிழகத்தில் 20 கூடுதல் உற்பத்தி மையங்கள் துவங்கப்பட உள்ளது. இவ்வாறு ஒவ்வொரு துறைகளிலும் சிறப்பான திட்டங்களை மேம்படுத்தி தமிழ்நாடு சிறந்த மாநிலமாக முன்னோக்கி செல்வதற்கு தமிழ்நாடு முதலமைச்சரின் சிறிய வழிகாட்டுதலே ஆகும். அந்த வகையில் பொது மக்களின் பொருளாதார வளர்ச்சி மேம்பட பல்வேறு திட்டங்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் செயல்படுத்தபட்டு வருகிறது.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
முன்னதாக கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறந்த கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நியாய விலை கடை விற்பனையாளர்களுக்கு பாராட்டு கேடயம் வழங்கி பால்வளத் துறை மற்றும் கதர் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பாராட்டுதலை தெரிவித்தார்.
கூட்டுறவு சங்கம் மூலம் 680 நபர்களுக்கு மகளிர் சுய உதவி குழு கடன் திட்ட உதவிகள், 24 நபர்களுக்கு மாற்றுத் திறனாளிகள் கடன் திட்ட உதவிகள், 24 நபர்களுக்கு டாப்சட்கோ கடன் திட்ட உதவிகள், 361 நபர்களுக்கு கே.சி.சி. கடன் திட்ட உதவிகள் இரண்டு நபர்களுக்கு வணிக கடன் திட்ட உதவிகள் 23 நபர்களுக்கு பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் கடன் திட்ட உதவிகள் ஒரு நபருக்கு சம்பள கடன் திட்ட உதவிகள் 11 நபர்களுக்கு கரவை மாடு கடன் திட்ட உதவிகள் என மொத்தம் ஆயிரத்து 137 நபர்களுக்கு ரூ.10.20 கோடி மதிப்பீட்டில் கடன் திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.
கூட்டுறவு வார விழா நிகழ்ச்சியில் மண்டல இணைப்பதிவாளர் ஜுனு, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் மனோகரன், ராமநாதபுரம் நகராட்சி சேர்மன் கார்மேகம், துணை சேர்மன் பிரவீன் தங்கம், ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் மாவீரன் வேலுச்சாமி, பால்வளத் துறை துணைப்பதிவாளர் புஷ்பலதா, கூட்டுறவு பயிற்சி நிலைய முதல்வர் ரகுபதி, துணைப் பதிவாளர் மணிகண்டன், நகராட்சி கவுன்சிலர் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.