நாகர்கோவில், செப்டம்பர் 23 –
6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான இலக்கிய மன்றம், வினாடி வினா மன்றம் மற்றும் சிறார் திரைப்பட மன்றங்களுக்கான மாவட்ட அளவிலான போட்டிகளை அக்டோபர் 7 முதல் 9க்குள் நடத்திட பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 2025-26ம் ஆண்டில் 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான இலக்கிய மன்றம், வினாடி வினா மன்றம் மற்றும் சிறார் திரைப்பட மன்றங்களுக்கான பள்ளி மற்றும் வட்டார அளவிலான போட்டிகளை நடத்துதல் சார்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி போட்டிகள் திட்டமிட்டு நடத்தப்பட்டு இலக்கிய மன்றம் சார்ந்த ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பெற்ற மாணவர் மற்றும் வினாடி வினா மன்ற போட்டியில் முதலிடம் மற்றும் இரண்டாம் இடம் பெறும் இரு குழுக்களும் மற்றும் சிறார் திரைப்பட மன்றம் சார்ந்த ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பெற்ற மாணவர் மட்டும் அடுத்த நிலை போட்டிகளை மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க செய்தல் வேண்டும்.
மாவட்ட அளவிலான போட்டிகளை அக்டோபர் 7 முதல் 9 வரை நடத்த திட்டமிட்டு போட்டிகளை நடத்தி வெற்றியாளர்களின் விபரங்களை அக்டோபர் 10ம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்தல் வேண்டும். மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு செல்லும் மாணவர்களின் பெற்றோர்களிடம் இருந்து ஒப்புதல் கடிதம் பெறப்படுதல் வேண்டும். மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க செல்லும் மாணவ மாணவிகளுடன் ஒரு ஆண் ஆசிரியர், ஒரு பெண் ஆசிரியை கட்டாயம் உடன் செல்லுதல் வேண்டும்.
இலக்கிய மன்ற போட்டிகளில் ஒவ்வொரு போட்டியிலும் முதல் இடம் பெற்ற வெற்றியாளர் அடுத்த நிலை போட்டியான மாநில அளவிலான போட்டியில் பங்கு பெறுபவர் வினாடி வினா மன்ற போட்டியில் முதலிடம், இரண்டாவது இடம் பெறும் இரண்டு குழுக்களும் அடுத்த நிலை போட்டியான மாநில அளவிலான போட்டியில் பங்கு பெறுவர். இவ்வாறு சுற்ற றிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


