நாகர்கோவில் ஆக 13
குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கி மாநகர பகுதிகளில் 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் செய்யும் வகையில் புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் தொடங்கப்பட்டன. மத்திய அரசின் அம்ரூத் திட்டத்தின்கீழ் இந்த திட்டம் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இதையொட்டி மத்திய மற்றும் மாநில அரசுகள் நிதியுதவி, மாநகராட்சி நிதி, உலக வங்கி நிதி என மொத்தம் ரூ.296.08 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த திட்ட பணிகள் தற்போது நிறைவு பெற்றுவிட்டன.இந்நிலையில்
புத்தன் அணையில் இருந்து தண்ணீரானது ராட்சத குழாய்கள் மூலம் நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது,இதற்காக 31.85 கி.மீ. தூரத்துக்கு குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. பின்னர் தண்ணீர் சுத்தம் செய்யப்பட்டு வீடுகளுக்கு வழங்கப்பட உள்ளன. இதற்காக புதிதாக 11 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தின் கீழ் 71 ஆயிரத்து 965 குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 3 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் பயன்பெற உள்ளனர். இணைப்புகள் மூலம் குடிநீர் கொடுக்கும் பணியை அதிகாரிகள் சோதனை ஓட்ட முறையில் பரிசோதனை செய்துள்ளனர்.
இந்த நிலையில் புத்தன் அணை குடிநீர் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சிகள் மூலம் தொடங்கி வைத்தார்,
அதனை தொடர்ந்து நாகர்கோவில்,கிருஷ்ணன்கோவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, மேயர் மகேஷ் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர் மேலும் இந்நிகழ்வின் போது குடிநீர் குழாயில் தண்ணீர் திறந்து விட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர் இதில் ஆணையர். நிஷாந்த் கிருஷ்ணா,சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ், எம் ஆர். காந்தி உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.