தஞ்சாவூர், ஜூலை 23 –
2026 தேர்தலிலும் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறினார். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி எழுதிய தேசிய கல்விக் கொள்கை 2020 என்னும் மத யானை நூல் திறனாய்வு கூட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் கலைஞர் நூலக வாசகர் வட்டம் நடத்திய நிகழ்ச்சியில் முரசொலி எம்பி அனைவரையும் வரவேற்று பேசினார். உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி பழநி மாணிக்கம், எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், அசோக்குமார், மேயர் சண். ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஏற்புரையாற்றி பேசியதாவது: நாங்கள் ஒட்டுமொத்தமாக யானையே (கல்விக் கொள்கை) வேண்டாம் என நாங்கள் கூறவில்லை; யானை என்பது அந்தந்த மாநிலத்துக்கு ஏற்ற யானையாக இருந்து விட்டால் நாங்கள் அதன் மீது ஏறி சவாரி செய்ய காத்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஒரு சித்தாந்தம் கல்வி என்கிற கட்டமைப்பை இடிக்க கூறுகிறது. ஒட்டுமொத்த இந்தியாவில் எந்த மாநிலமும் மத்திய அரசின் வஞ்சக வார்த்தைக்கு அடிபணியலாம். ஆனால் இது தமிழ்நாடு அடி பணியாது.
பா. ஜனதாவினர் ஏற்கனவே ஒரு முறை வேலை கையில் எடுத்தார்கள். அப்போதும் நாம் தான் வெற்றி பெற்றோம். இப்போது முருகரை கையில் எடுத்துள்ளனர். கண்டிப்பாக 2026 ல் தி.மு.க வெற்றி பெற்று ஆட்சி அமைக்க போகிறது.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கையின் உள்ளே நாங்கள் செல்ல மாட்டோம். தமிழகத்தின் நான்கு ஆண்டுகளில் 3 ஆயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்திய ஒரே இயக்கம் திமுக தான். தேசிய கல்விக் கொள்கை என்னும் மதயானை நமது தமிழகத்தை சீரழித்து விடும். நாம் சுதாரித்துக் கொள்ள வேண்டும் என கடந்த 2016-ல் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கூறினார். பிறகு 2019 முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்தார் இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராசேந்திரன், ஊடகவியலாளர் செந்தில்வேல், திராவிடக் கழக துணை பொது செயலாளர் மதிவதனி ஆகியோர் ஆய்வுரையாற்றினர். நிறைவாக செழியன் நன்றி கூறினார்.