தென்காசி
சென்னை இராணி மேரி கல்லூரியிலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் தென்காசி மாவட்டம் சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் ரூ.3.97 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக கட்டப்பட்டுள்ள 14 வகுப்பறைகளை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்லைவர் கமல்கிஷோர், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார்கள்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக பெண்கள் நன்கு படித்து தங்கள் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்பதற்காக மகளிர் உரிமைத்தொகை, இலவச பேருந்து பயணம், புதுமைப்பெண் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மாணவர்களுக்கென தமிழ்ப்புதல்வன் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில் இன்றைய தினம் தென்காசி மாவட்டம் சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் கூடுதலாக கட்டப்பட்டுள்ள 14 வகுப்பறை கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தின் தரைத்தளத்தில் 7 வகுப்பறைகள், 2 படிக்கட்டுகள், மற்றும் சாய்வுதள வசதிகளுடனும், முதல்தளத்தில் 7 வகுப்பறைகள், 2 படிக்கட்டுகள் மற்றும் கழிப்பறை வசதியுடனும் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கல்லூரியில் 2800 மாணவ, மாணவியர்கள் பயின்று வருகிறார்கள். இக்கூடுதல் வகுப்பறைகளால் பி.ஏ.தமிழ், பி.ஏ.ஆங்கிலம், எம்.ஏ.தமிழ், எம்.ஏ.ஆங்கிலம் துறைகளில் பயிலும் 600 மாணவ, மாணவியர்கள் பயனடைவார்கள் என கல்லூரி ஆசிரிய, ஆசிரியைகளும், அலுவலர்களும், மாணவ, மாணவியர்களின் பெற்றோர்களும் மகிழ்ச்சியாக உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன்,சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரி முதல்வர் டாக்டர். கணேசன், சுரண்டை நகர்மன்ற தலைவர் வள்ளி முருகன், பொதுப்பணித்துறை, திருநெல்வேலி (தொழில்நுட்பம்) உதவிப் பொறியாளர் சரத்குமார், பொதுப்பணித்துறை. திருநெல்வேலி, (மின்) உதவி மின்பொறியாளர் ரஸீன் அகமது, மற்றும் மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியைகள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.