திருப்பரங்குன்றம், ஜூன் 28 –
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட சூரக்குளம் பகுதியில் 100 நாள் வேலைத்திட்ட பணிகள் குறித்து விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்க தாகூர் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து பணியாளர்களிடம் எத்தனை நாள் வேலை, எவ்வளவு ஊதியம் வந்திருக்கிறது என்பது குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாணிக் தாகூர் எம்பி 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிபுரிவர்களுக்கு தொடர்ந்து சம்பளம் தராமல் மோடி அரசு சதி செய்து வருகிறது.
ஒரு வேலையை நான்கு பேர் பார்த்த நிலையில் தற்போது ஒருவர் பார்க்கும் நிலைக்கு 100 நாள் வேலை திட்டத்தை தள்ளி இருக்கிறது என்றார். தொடர்ந்து சமஸ்கிருதத்திற்கு அதிக நிதியும் தமிழுக்கு குறைவான நிதியும் ஒதுக்கியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு மோடி அரசு, ஆர்.எஸ்.எஸ். தமிழ் மற்றும் மற்ற மொழிகளை அழிப்பதற்கான வேலைகளை செய்வார்கள். அதற்கு ஏற்ப நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்கி இருப்பது ஆர்எஸ்எஸின் வழிகாட்டியாக இந்த அரசு செய்திருக்கிறது என்றார்.
மேலும் கீழடி வரலாற்றை ஆய்வு செய்த அதிகாரியை மாற்றம் செய்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மாணிக் தாகூர் கீழடி தொடர்பாக தமிழர்களின் வரலாற்றை தொடர்ந்து இந்த அரசு அழித்து வருகிறது. தமிழரின் வரலாற்றை வெளியில் கொண்டு வந்த ராமகிருஷ்ணனை இந்த அரசு தண்டித்து இருக்கிறது. அவர்களை பொறுத்தவரை அவரை தண்டித்தால் தமிழர்களை தண்டிப்பது என்று அர்த்தம். திருமணத்தில் சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடும் என்பார்களே; அந்த கதை தான். இதனால் தமிழர்களின் வரலாறை மறைக்க முடியாது.
வருகிற மழைக்கால கூட்டத்தொடரில் இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்புவோம் என்றார்.
தொடர்ந்து கப்பலூர் சுங்கச்சாவடி மாற்றம் செய்யக்கோரி எந்த கடிதமும் வரவில்லை எனவும் மத்திய அரசு தகவல் மூலம் பதிலளித்துள்ளதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு கப்பலூர் சுங்கச்சாவடி தொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரியிடம் பேசினோம். அவர் புதிய சிஸ்டம் வரப்போகிறது. ஆறு மாதத்தில் எல்லாப் பிரச்சனையும் தீர்ந்து விடும் என்றார்.
ஆனால் ஏமாத்து வேலை 3000 கட்டினால் 200 தடவை போயிட்டு வரலாம். இதுதான் அந்த சிஸ்டமாம். பாஜக ஆட்சி இருக்கும் வரை கப்பலூர் டோல்கேட் இருக்கும். கப்பலூர் சுங்கச்சாவடி மாற்றப்பட வேண்டியது. இதற்காக தொடர்ந்து நாங்கள் குரல் எழுப்புவோம் என்றார்.
முன்னதாக 100 நாள் வேலை பணிகளை ஆய்வு மேற்கொண்ட மாணிக் தாகூர் எம்பியை கிராம மக்கள் முற்றுகையிட்டு தண்ணீர் வசதி, வேண்டிய பேருந்து வசதி இல்லாததால் மல்லிகை பூக்களை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுவதாகவும் சாலையை சீரமைத்து கொடுக்கும் படியும் கோரிக்கை வைத்தனர். இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து மாணிக் தாகூர் எம்பி அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி தர அதிகாரிகளிடம் பேசுவதாக கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.