மயிலாடுதுறை, ஆகஸ்ட் 5 –
பாடல் பெற்ற பழமையான மூவலூர் மார்க்க சகாயேஸ்வரர் ஆலயத்தில் ருத்ர ஹோமம் ருத்ர அபிஷேகம் நடைபெற்றது. தர்மபுரம் ஆதீன மடாதிபதி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த சைவ ஆதீன திருமடம் அமைந்துள்ளது. மடத்தின் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் அறுபதாம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு பழமை வாய்ந்த 108 சிவாலயங்களில் ருத்ர ஹோமம் மற்றும் ருத்ர அபிஷேகம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மூவரால் பாடல் பெற்ற மயிலாடுதுறை அடுத்த மூவலூர் மார்க்க சகாயேஸ்வரர் ஆலயத்தில் ருத்ர ஹோமம் நடைபெற்றது. இதுபோன்று சித்தர் காடு சம்பந்தர், மயிலாடுதுறை ஐயாரப்பர் கோயில் தொடர்ந்து ஹோமத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடம் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு சுவாமி மற்றும் அம்பாளுக்கு அபிஷேகம் செய்து மகாதீபாரதனை காட்டப்பட்டது. தர்மபுரம் ஆதீன மடாதிபதி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.