திருப்புவனம், ஜுன் 21 –
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியம் பூவந்தி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஏனாதி காலனியில் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு இரவில் வாகனம் மோதி மின் கம்பம் கீழே சாய்ந்துள்ளது. கீழே சாய்ந்து விழுந்த மின்கம்பத்தில் தற்போது வரை மின் வினியோகம் உள்ளது. இந்த விபத்து குறித்து பூவந்தி உதவி மின் பொறியாளரிடம் தகவல் தெரிவித்ததாகக் கூறுகின்றனர். ஆனால் இன்று வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்: மின்கம்பம் சாய்ந்து சுமார் ஒரு மாத காலத்திற்கு மேலாகிறது. பூவந்தி உதவி மின் பொறியாளரிடம் பலமுறை நடவடிக்கை எடுக்கக் கூறி தகவல் தெரிவித்தோம். ஆனால், இன்று வரை உடைந்து சாய்ந்த மின்கம்பத்தில் மின்விநியோகம் இருந்து வருகிறது. எங்கள் ஊரில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். தவறுதலாக யாராவது தெரியாத நபர்கள் அவ்வழியாக சென்றால் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எங்கள் கிராமத்தில் அனைவரும் கால்நடைகள் வளர்த்து வருகின்றோம். தவறுதலாக ஆடு மாடு சென்றாலே மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே, புதிய மின் கம்பம் அமைத்து எங்கள் பகுதி மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் மற்றும் ஒரு மாத காலமாக ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் பூவந்தி உதவி மின் பொறியாளர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.