சுசீந்திரம், ஜுன் 19 –
பறக்கை அருகே உள்ள சோதிரிநகர், அம்மையப்பன் இல்லத்தைச் சேர்ந்தவர் பிரேம்குமார், வயது 37. இவர் நாகர்கோவில் இராணித்தோட்டம் பணிமனையில் அரசு பஸ் தற்காலிக கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பெயர் பிரேமா, வயது 22. இவர்களுக்குத் திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரையிலும் குழந்தைகள் இல்லை. இவரது மனைவி பிரேமா சிகிச்சைக்காக அவள் அம்மா வீட்டில் இருந்தார். பிரேம்குமார் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு மேல் 10 மணிக்குள் ஏதோ ஒரு சமயத்தில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து படுக்கையறையில் படுக்கச் சென்றார். இரவு 10 மணிக்கு அவரது அம்மா சரோஜா எழுப்பிய போது பிரேம்குமார் எந்தவித அசைவின்றி மயக்க நிலையில் காணப்பட்டார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பிரேம்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். சரோஜா பிரேம்குமார் உடலை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்துவிட்டு சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் பொறுப்பு இன்ஸ்பெக்டர் ராமர், சப் இன்ஸ்பெக்டர் லிபிபால்ராஜ் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பிரேம்குமார் உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று (19-6-2025) வியாழக்கிழமை உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பரிசோதனை முடிந்த பின்னரே பிரேம்குமார் விஷம் குடித்து இறந்தாரா அல்லது எப்படி இறந்தார் என்பது தெரியும் வரும் என போலீசார் தெரிவித்தனர்.