நாகர்கோவில், ஜூலை 29 –
நாகர்கோவிலில் கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகர்கோவில் மேல ஆசாரிப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் வேல்ராஜன். அவரது மகன் தீபன் (18). நாகர்கோவிலில் உள்ள கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக மாணவர் தீபன் ஏதோ மன வருத்தத்தில் இருந்து உள்ளார். வீட்டில் இருந்தவர்களிடம் சரியாக பேசவில்லை. அவரது பெற்றோர் இது குறித்து கேட்ட போதும் எதுவும் கூறவில்லை.
நேற்று முன்தினம் தீபனின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் தீபன் மட்டும் தனியாக இருந்தார். கல்லூரிக்கும் செல்லவில்லை. மதியம் அவரது தாயார் நாகேஸ்வரி திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் அறையில் தீபன் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதை பார்த்து நாகேஸ்வரி அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தனர். ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி தீபனின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இது தொடர்பாக அவரது நண்பர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. கல்லூரி மாணவன் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.