தருமபுரி, செப்டம்பர் 06 –
தருமபுரியில் நகரையொட்டி உள்ள மைய பகுதியில் வேளாண்மை விற்பனை துறை சார்பில் 12/11/2000 ஆண்டு உழவர் சந்தை துவக்கப்பட்டு 2021-2022 ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்டது. பொதுமக்கள் நலனை கருதி காலை, மாலை இரு நேரங்களிலும் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரமாக கருதப்படும் இந்த உழவர் சந்தையில் ஏற்கனவே 74 கடைகள் உள்ளது.
தினந்தோறும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைவித்த காய்கறிகளை கொண்டு வந்து வியாபாரம் செய்கின்றனர். தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் வாங்கி செல்கின்றனர். இருப்பினும் போதிய கடைகள் இல்லாததால் உழவர் சந்தைக்கு வெளியே கடைகள் வைத்து வியாபாரம் செய்வதால் அடிக்கடி போக்குவரத்து பிரச்சனை ஏற்படுவதோடு பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுவதால் தங்களுக்கு கூடுதலாக கடைகள் கட்டி தரவேண்டும் என தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.
அதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து உழவர் சந்தையில் கூடுதலாக 28 இலட்ச ரூபாய் மதிப்பில் 16 கடைகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் நகரமன்ற தலைவர் லட்சுமி மாது, ஆணையாளர் சேகர், நிர்வாக அலுவலர் இளங்கோவன், உதவி வேளாண்மை அலுவலர் பாண்டுரங்கன், பாலை அன்பு மற்றும் விவசாயிகள், நுகர்வோர்கள் கலந்து கொண்டனர்.



