சென்னை, பிப். 19 –
டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மும்பையைச் சேர்ந்த 44 வயதான பெண்கள் நல மருத்துவருக்கு பார்வையை மீட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக கடுமையான குளுக்கோமா மற்றும் கண் தொடர்பான சிக்கல்களால் இரண்டு கண்களிலும் படிப்படியாக பார்வைத்திறன் குறைந்து, 2024-ல் முற்றிலுமாக பார்வையை இழந்திருந்தார். இதற்கு முன் பல அறுவை சிகிச்சைகள் செய்தும் பலன் கிடைக்காத நிலையில், டாக்டர் அகர்வால்ஸ் மருத்துவமனை இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இது உலகளவில் முதன் முறையாக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட ஒரு மிகச் சிக்கலான அறுவை சிகிச்சை நிகழ்வாக கருதப்படுகிறது. நோயாளியின் இடது கண்ணில் ஏற்கனவே தவறான வகையில் பொருத்தப்பட்டிருந்த செயற்கை லென்ஸை மருத்துவர்கள் அகற்றினர். பின்னர், ‘5எஃப்- ஐ.எஸ்.எல்.எஃப்’ எனும் நவீன உத்தியின் வழியாக, புதிய லென்ஸ் பொருத்தப்பட்டது. இதனுடன் கண்களின் முழுமையான குறைபாடுகளை சரிசெய்வதற்காக, கருவிழி மாற்று சிகிச்சை மற்றும் கண் பாவை சீரமைப்பு ஆகியவையும் ஒரே சிகிச்சை அமர்வில் செய்யப்பட்டன.
இந்த செய்தியாளர் சந்திப்பில் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை குழுமத்தின் கண்புரை மற்றும் கண் அழுத்தச் சேவைகளின் மூத்த ஆலோசகர் டாக்டர். சூசன் ஜேக்கப், மருத்துவச் சேவைகள் மண்டலத் தலைவர் டாக்டர் சௌந்தரி மற்றும் விட்ரியோ ரெடினா துறையின் கிளினிக்கல் லீட் மற்றும் தலைவருமான டாக்டர் மனோஜ் காத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து டாக்டர் அகர்வால்ஸ் முதுநிலை கண்சிகிச்சை நிபுணர் டாக்டர் அஸ்வின் அகர்வால் கூறுகையில், ” அதிக சிக்கலான ஒரு பாதிப்பு நேர்வுக்கான, பல அறுவை சிகிச்சை அணுகுமுறைகள் இதற்கு தேவைப்பட்டன. கண்ணின் சிதைந்த அமைப்பை சீரமைத்தல், புதிய லென்ஸை பாதுகாப்பாக பொருத்துதல் எனப் பல சிகிச்சைகளை ஒரே நேரத்தில் செய்ய வேண்டியிருந்தது. எங்கள் மருத்துவக் குழுவின் ஒருங்கிணைந்த நிபுணத்துவமும், சிறப்பான கட்டமைப்பு வசதிகளும் இதை சாத்தியமாக்கியது.” என்று தெரிவித்தார்.
சாதனை முயற்சியான இந்த அறுவைசிகிச்சையை மேற்கொண்ட டாக்டர் சூசன் ஜேக்கப் கூறுகையில், “நோயாளிக்கு 2010-லிருந்தே குளுக்கோமா பிரச்சனை இருந்தது. கண் புரைக்கான அறுவை சிகிச்சை மற்றும் தாங்கு திசு நீக்கல் சிகிச்சை போன்றவற்றை பிற மருத்துவமனைகளில் செய்து கொண்ட போதிலும், அவரது பார்வைத்திறன் குறைந்து கொண்டே போனது. ஏறக்குறைய பார்வைத்திறனை முழுமையாக இழந்த நிலையில் அவர் எங்களிடம் சிகிச்சைக்கு வந்தார். அவருக்குப் பொருத்தப்பட்டிருந்த பழைய லென்ஸ் நகர்ந்து, கண்ணின் மற்ற பகுதிகளை அழுத்தியதே இதற்கு முக்கிய காரணம். நாங்கள் அந்த லென்ஸை அகற்றி, ‘ 5 எஃப்- ஐ.எஸ்.எல்.எஃப்’ முறையில் புதிய லென்ஸைப் பாதுகாப்பாகப் பொருத்திப் பார்வையை மீட்டோம்,” கூறினார்.



