தென்தாமரைகுளம், செப். 1:
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் நடைபெற்ற ஆவணி திருவிழாவின் 11-வது நாளான நேற்று, விமரிசையாக தேரோட்டம் நடைபெற்றது. கடந்த 21-ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ்விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்றது.
விழாவின் 8-ம் நாளான கடந்த 28-ம் தேதி அய்யா வைகுண்டசாமி வெள்ளைக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. 11-வது நாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு திருநடை திறக்கப்பட்டு, அய்யாவுக்கு சிறப்பு பணிவிடைகள் நடைபெற்றன. தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு அய்யா வைகுண்டசாமி பச்சை பல்லாக்கு வாகனத்தில் எழுந்தருளி, அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேரில் வீற்றருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து பஞ்சவர்ண தேரோட்டம் தொடங்கியது. தேரோட்ட நிகழ்ச்சிக்கு குரு மகா சன்னிதானம் பால. பிரஜாபதி அடிகளார் தலைமை வகித்தார். குருமார்கள் பால. லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ், பையன் கிருஷ்ண நாமமணி, பையன் செல்ல வடிவு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேருக்கான பணிவிடைகளை குருமார்கள் பையன் அம்பிரிஷ், செல்லா, பையன் நெமிரிஷ், பையன் கவுதம் ராஜா, பால கிருஷ் ஆகியோர் செய்தனர்.
தலைமைப்பதியில் இருந்து புறப்பட்ட திருத்தேர் கீழரத வீதி, தெற்கு ரதவீதி, மேலரத வீதி வழியாகச் சென்று வடக்கு ரத வீதியில் உள்ள தலைமைப்பதியின் வடக்கு வாசல் பகுதியை அடைந்தது. அப்போது திரளான அய்யாவழி பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அய்யா வைகுண்டசாமிக்கு பழம், வெற்றிலை, பாக்கு, பன்னீர் உள்ளிட்ட பொருட்களை சுருளாக படைத்து வழிபட்டனர்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்ட திருத்தேர் மாலை 6 மணியளவில் நிலையை வந்தடைந்தது. தேரோட்டத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான அய்யாவழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து இரவு 7 மணிக்கு அய்யாவின் ரிஷப வாகன ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் அதிகாலையில் அய்யாவுக்கு பணிவிடையும், தொடர்ந்து திருக்கொடி இறக்க நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை தலைமைப்பதி நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.



