நாகர்கோவில், ஜூன் 12 –
ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் திட்டம், கடலில் கனிம மணல் எடுக்கும் திட்டம், கடலில் காற்றாலை அமைக்கும் திட்டம், கப்பல்களால் ஏற்படும் ஆபத்தான விபத்துகள் போன்றவற்றால் கடலையும் கடற்கரையையும் விவசாய நிலங்களையும் பாதுகாக்க சின்னமுட்டம் துறைமுகத்தில் கடலில் இறங்கி கடல் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. இப்போராட்டத்திற்கு சின்னமுட்டம் பங்குப்பேரவை துணைத்தலைவர் கமலஸ் தலைமையேற்றார். “அழிக்காதே, அழிக்காதே கடலையும் கடற்கரையையும் அழிக்காதே; இழப்பீடு வழங்கு, இழப்பீடு வழங்கு கப்பல் விபத்தால் மீனவ மக்கள் ஒவ்வொருவருக்கும் தலைக்கு ஒரு கோடி இழப்பீடு வழங்கு” என்று ஆண்களும் பெண்களும் கடலில் இறங்கி முழக்கமிட்டனர். மீன்பிடித்தொழிலாளர்கள் தங்கள் படகுகளில் கருப்புக் கொடிகட்டி “பாதுகாத்திடு, பாதுகாத்திடு கடலையும் கடலோடிகளையும் பாதுகாத்திடு” என்று முழக்கமிட்டு கடலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் . இப்போராட்டத்தை வாழ்த்தி கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி இயக்குநர் டங்ஸ்டன், சுற்றுச்சூழல் காப்பாளர் குழு ஒருங்கிணைப்பாளர் குறும்பனை பெர்லின் ஆகியோர் பேசினர். அவர்கள் உரையில் குமரி தெற்கு கடல்பகுதியில் 27155 ச.கி.மீ. பகுதியில் இயற்கை எரிவாயு எண்ணெய் எடுக்கும் திட்டத்தையும் தனுஷ்கோடி முதல் ராமேஸ்வரம் வரை கடலில் காற்றாலை அமைக்கும் திட்டத்தையும் கொல்லம் முதல் மன்னார் வளைகுடா வரை கடலில் அணுக்கனிமச் சுரங்கம் அமைக்கும் திட்டத்தையும் கிள்ளியூர் தாலுகா பகுதிகளில் 1144 ஹெக்டேர் நிலங்களில் அணுக்கனிமச் சுரங்கத் திட்டத்தையும் உடனே கைவிட வேண்டும் என்றும் கப்பல் விபத்தால் ஒரு தலைமுறையையே பாதிப்புக்குள்ளாகும் மீனவர்களுக்கு ஆளுக்கு ஒரு கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இறுதியில் சின்னமுட்டம் பங்குத்தந்தை மேக்சன் நன்றிகூறி போராட்டத்தை முடித்து வைத்தார்.