விழுப்புரம், ஜூலை 29 –
விழுப்புரம் மாவட்டம், காணை ஊராட்சி ஒன்றியம் காங்கியனூர் அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், காணை ஊராட்சி ஒன்றியம் காங்கியனூர் ஊராட்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறையின் கீழ் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது குழந்தைகள் வருகைப்பதிவேடு, உணவு வழங்கும் பதிவேடுகள், குழந்தைகளின் ஊட்டச்சத்தினை கண்காணிக்கும் பதிவேடு உள்ளிட்டவற்றை பார்வையிட்டதுடன் அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகள் வயதிற்கேற்ற எடை, உயரம் உள்ளிட்டவை சரியாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளுக்கு அரசால் வழங்கப்படும் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை முறையாக வழங்கி ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கிட வேண்டும். அங்கன்வாடி மையத்திற்கு வருகை புரியாத குழந்தைகளின் பெற்றோர்களை நேரில் சந்தித்து அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகளை தொடர்ந்து அனுப்பிட விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.
இதுமட்டுமல்லாமல், குழந்தைகளுக்கு வாரந்தோறும் மூன்று முட்டைகள் மற்றும் நாள்தோறும் உணவில் காய்கறிகள், கீரைகள் சமைத்து வழங்கிட வேண்டும் என அங்கன்வாடி பணியாளருக்கு அறிவுறுத்தப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார். ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவனேசன், ஜீலியம் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.