இளையான்குடி, செப். 12 –
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் கீழாயூர் குரூப், அ.மெய்யனேந்தல் ஊராட்சியிலுள்ள ஆழவாய்க் கண்மாயில் விவசாய பயன்பாட்டிற்காக குறைந்த அளவு மண் எடுத்துக்கொள்ள அனுமதி பெற்று நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாகவும், ஒரு டிராக்டர் மண்விலை ரூ.1000 என நிர்ணயம் செய்து வியாபார நோக்கத்துடனும் 20க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் மண் எடுத்து விற்பனை செய்துவருகின்றனர்.
இளையான்குடி வட்டாட்சியர் மற்றும் இளையான்குடி காவல்துறையினரிடம் பலமுறை பொதுமக்கள் புகார் அளித்தும் கண்டுகொள்ளாததால் மண் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. மணல் கடத்தும் கும்பலிடம் பணம் பெற்றுக் கொண்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையா? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அளவுக்கு அதிகமாக மண் அள்ளுவதால் அதிக அளவு விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே மணல் மாபியாவிடமிருந்து எங்களது கண்மாயை மீட்க வேண்டும் என கிராம பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



