தென்காசி, ஜூன் 14 –
தமிழகத்தில் அரசு அதிகாரி மற்றும் ஊழியர்கள் அரசுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்த்திட முன் வந்தால் தான் அரசுப் பள்ளிகள் மீது பொதுமக்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படும் என கடையநல்லூர் நகர சபை துணைத் தலைவர் ராசையா அரசு ஊழியர்களுக்குத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான விடியல் ஆட்சியில் கல்விக்காக மத்திய அரசை எந்த வகையிலும் எதிர்நோக்கி காத்திருக்காமல் எண்ணற்ற சலுகைகளையும் சேவைகளையும் அபிவிருத்திகளையும் செய்து வருகிறது. அந்த வகையில் தமிழகம் ஒட்டு மொத்த இந்தியாவிலேயே கல்வியில் முதலிடம் பெற்று வருகிறது. கல்வியில் மட்டுமின்றி விளையாட்டுத் துறையிலும் தனது சாதனையை படைத்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 37 ஆயிரத்து 554 அரசுப் பள்ளிகள் உள்ள நிலையில் அதில் சுமார் 52 லட்சத்து 75 ஆயிரத்து 23 பேர் கல்வி கற்று வருகின்றனர். அதே நேரத்தில் தனியார் ஆங்கிலப் பள்ளிகள் சுமார் 12,000 அளவில் உள்ளன என்றும் அவைகளில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை விட நான்கு லட்சம் பேர் அதிகம் படிப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்ற நிலையில் அரசுப் பள்ளி எண்ணிக்கையில் மூன்றில் ஒரு சதவிகிதம் மட்டுமே தனியார் பள்ளிகள் உள்ளன. ஆனாலும் மக்கள் தனியார் பள்ளிகளை நாடிச் செல்ல காரணம் அரசு பள்ளிகளில் பல்வேறு சிறப்பு அம்சங்கள், இட வசதிகள், கழிப்பிட வசதிகள் இருப்பினும் ஒரு சிலப் பகுதிகளில் மேற்கண்ட கட்டமைப்புகள் இல்லாத சூழ்நிலையிலும் பல்வேறு வகை காரணங்களால் அரசு பள்ளிகள் பலவற்றில் தற்போது போதிய மாணவர்கள் இல்லாமல் ஒவ்வொரு வருடமும் சில பள்ளிகள் மூடும் நிலையை எட்டியுள்ளது. தமிழக அரசு எத்தனையோ சலுகைகளை வாரி வழங்குகிறது. உதாரணமாக அரசு பள்ளிகளில் ஆறு முதல் பிளஸ் டூ வரை கல்வி கற்கும் மாணவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீதம் முன்னுரிமை அளிக்கும் சட்டம், அரசுப் பள்ளியில் படித்து முடித்து பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் மற்றும் மருத்துவம் தொழிற்கல்வி பட்டய படிப்புக்கு 7-5 சதவீதம் ஒதுக்கீடு போன்ற சலுகைகளை இந்த அரசு வழங்கி வருகிறது. அத்துடன் தமிழகக் கல்வித்துறை தற்போது எல்கேஜி வகுப்புகளையும் துவக்கி உள்ளது. அப்படியும் மாணவர் சேர்க்கை அதிகரிக்காததற்கு மற்றொரு காரணம் அரசு பள்ளி ஆசிரியர்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை 99 சதவீதம் பேர் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் கல்வி கற்க சேர்ப்பதில்லை. ஆசிரியர்கள் மட்டுமின்றி அரசு ஊழியர்களும் இதுபோன்ற நடைமுறையைத் தொடர்ந்து பின்பற்றி வருவதால் அரசு பள்ளிகள் மீது பாமர மக்களுக்கு நம்பிக்கை இல்லா நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே ஏழை எளியவர்கள் கூட கடன் வழங்கியாவது தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். அண்மையில் கூட செங்கல்பட்டு மாவட்ட ஆலந்தூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி முருகேசன் என்பவர் தனது குழந்தையை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சேர்த்துள்ளார். இது போன்று அரசு நிர்வாகத்தில் பணிபுரிகின்ற ஒவ்வொரு ஊழியர்களும் அதிகாரிகளும் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்தால் ஆசிரியர்களும் சிறப்பாகக் கற்றுக் கொடுப்பர். அதைப் பார்த்து பகுதி மக்களும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க முன் வருவர். இதைத் தொடர்ந்து தானாகவே அரசுப் பள்ளிகளின் தரம் உயர்ந்து விடும் என்ற நம்பிக்கை பொதுமக்களிடையே ஏற்படும். எனவே, தயவுசெய்து அரசுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க அரசு ஊழியர்கள் முன் வர வேண்டுமென இந்த நல்ல தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் நகர சபை துணைத் தலைவர் ராசையா தெரிவித்துள்ளார்.