சங்கரன்கோவில், ஜுன் 7 –
சங்கரன்கோவிலில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கிய டாக்டர் கலைஞருக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு திமுக மாவட்டச் செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில் பெண்களை சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்குக் கொண்டு வந்தவர் டாக்டர் கலைஞர். எப்பொழுதுமே பெண்கள் முன்னேற்றத்திற்காக உறுதுணையாக இருக்கும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். பெண்கள் வாழ்வாதாரம் மேம்பட சுய உதவிக் குழுக்களை உருவாக்கி அதன் மூலம் பெண்கள் உயர்ந்த நிலைக்கு வர உதவியவர் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர். அதே போல் தற்போது தமிழ்நாட்டில் ஆட்சி நடத்தி வரும் திராவிட மாடல் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலைஞர் வழியில் பெண்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மகளிர் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு அதிகளவு கடன் வழங்குதல் திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். மகளிருக்கு செய்து வரும் பல்வேறு திட்டங்களை எடுத்துக் கூறி ராஜா எம்எல்ஏ சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் ஏராளமான மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் மாவட்டப் பொருளாளர் சரவணன், நகரச் செயலாளர் பிரகாஷ் மற்றும் திமுக பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.