மார்த்தாண்டம், அக். 29 –
குமரி மாவட்டத்தில் இருந்து உலகத்தரம் வாய்ந்த ரப்பர் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் ரப்பர் மரங்களின் இலைகள் உதிரும். இதனால் பால் வடிப்பு தொழில் நிறுத்தப்படும். புதிய இலைகள் துளிர்த்த பிறகு மார்ச் அல்லது ஏப்ரலில் தொழில் மீண்டும் தொடங்கும்.
தற்போது மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், ரப்பர் பால் வடிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் பல தோட்டங்களில் பால் வடிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் வேலை இழந்து, வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.
இப்படி இருக்க, ரப்பர் மரங்களை தாக்கும் நோய்களும் விவசாயிகளை கடுமையாக பாதித்து வருகிறது. இலை சுருட்டல் நோய், மரம் அழுகல் நோய் போன்றவற்றால் ரப்பர் தோட்டங்களில் விவசாயிகளுக்கு கடும் இழப்பு ஏற்படுகிறது. ரப்பர் மரம் அழுகினால், பின்னர் அது காய்ந்து பட்டுப்போகும். அதன்பிறகு அது பயன்படாது. இதுபோன்ற நோய் மழை நேரங்களில் அதிகம் ஏற்படுவது வழக்கம்.
இந்நிலையில், குமரியில் அருமனை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தோட்டங்களில் தற்போது ரப்பர் மரங்களில் அழுகல் நோய் அதிகரித்துள்ளது. தோட்டத்தில் உள்ள மரங்களின் பட்டைகளில் சிறிதாக ஏற்படும் வெடிப்பு மூலம் ரப்பர் பால் வீணாக வடிந்து வெளியேறும். பின்னர் இந்த ஓட்டை அதிகமாகி, மரம் செல்லரித்தது போன்று உதிர்ந்தும், காய்ந்தும், பூஞ்சை, காளான் போன்றவை தொற்றியும் பால் வடிக்க முடியாத நிலை ஏற்படும். இறுதியில் மரம் பட்டுப்போகும்.
தற்போது மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால், இந்த அழுகல் நோய் அதிகரித்து விவசாயிகளுக்கு கடும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். எனவே அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு, விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். மேலும் இந்த நோயில் இருந்து மரங்களை காப்பாற்ற, வேளாண் அதிகாரிகள் மூலம் உரிய ஆலோசனைகள், மருந்துகள் வழங்கிட வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.



