தஞ்சாவூர், ஜூன் 9 –
தஞ்சாவூரில் கலைஞர் ஒரு முத்தமிழ் பல்கலைக்கழகம் என்ற நூலை வெளியிட்டு அமைச்சர் கோவி. செழியன் பேசினார். தஞ்சாவூரில் பச்சையப்பன் கல்லூரி தமிழ்த் துறை முன்னாள் தலைவர் தமிழ் பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினருமான முனைவர் வா.மு.சே. முத்து ராமலிங்கம் ஆண்டவர் தொகுத்துப் பதிப்பித்த கலைஞர் ஒரு முத்தமிழ் பல்கலைக்கழகம் என்ற நூலை வெளியிட்டு உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் பேசியதாவது: முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதும் போது உருவான சிந்தனையைத் திரைப்படமாக்கினார். கால ஓட்ட சூழ்நிலையில் அரசியலில் வெற்றி பெற்று முதல்வராகிறார். அதன் பிறகு அன்றைக்கு எழுதிய அதே தாக்கம் அவரது உள்ளத்தில் இருந்ததால் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத் திட்டத்தை ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின் செயல்படுத்தினார். நினைத்ததை எழுதுவது, அதைச் சட்டமாக்கி மக்களுக்கு வாழ்வளிப்பது என்ற கொள்கையை கருணாநிதி கடைபிடித்தார். அப்படிப்பட்ட ஆளுமை மிக்கத் தலைவரைப் பற்றி நூலாசிரியர் தொகுத்து வழங்கியுள்ளார். நாம் மனிதர்களாக வாழவும் உணர்வோடு இருக்கவும் வேண்டும் என்பதற்கான அடையாளம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. பெரியாரின் கொள்கைகள், அண்ணாவின் சித்தாந்தங்கள், கருணாநிதியின் தத்துவங்களைத் தொகுத்து வழங்குவதற்கான பெரும் முயற்சியாக நூல் உள்ளது என்றார் அமைச்சர். நூலை திருஞானசம்பந்தம் அறக்கட்டளை செயலர் ஜெய்லானி பெற்றுக்கொண்டார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மேயர் சண். ராமநாதன், தமிழ் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ) பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். நூலாசிரியர் வா.மு.சே. முத்துராமலிங்க ஆண்டவர் ஏற்புரையாற்றினார். முன்னதாக திராவிட கருத்தியல் ஆசிரியர் சங்க நிர்வாகி பெரி. கபிலன் அனைவரையும் வரவேற்றார். நிறைவாக எழுத்தாளர் அடைக்கலம் நன்றி கூறினார். நிகழ்ச்சியைத் தமிழ்ப் பல்கலைக்கழக இணை பேராசிரியர் வெற்றிச்செல்வன் தொகுத்து வழங்கினார்.